November 27, 2008

என்ன பேசினார் பிரபாகரன்?

இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள். " ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள். எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள். எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள். இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும் எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது. மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.எனது அன்பான மக்களே! என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது. சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம். தனித்து நின்று போராடுகிறோம் இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம். நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம் இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம். இந்த மண் எங்களின் சொந்த மண் சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம். ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம். சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது. சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார் தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம் பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம். போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம். இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம். உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை. புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது. பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது. பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது. சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது. எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன. தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன. இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது. அனைத்துலக நாடுகளின் பாராமுகம் சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை. மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது. இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது. தமிழினத்துக்கு எதிரான போர் தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது. இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர். இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது. பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது. சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது. வரலாறு காணாத கொடூர அடக்குமுறை எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது. உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது. சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது. இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது. கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது. எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது. எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது. பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று. எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை. எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை. உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம் எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன். இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம் இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன. இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது. நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். தமிழக உறவுகளுக்கு நன்றி காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன். எனது அன்பான மக்களே! சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது. போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம் அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது. போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள். தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான். சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை. மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது. சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது? தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது. புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது. சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை. ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம். இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை. தொடர்ந்து போராடுவோம் எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக. "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

November 20, 2008

இலங்கையும், தமிழீழமும், இந்தியாவும் . . .

"அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாகத் தொய்ந்து போயுள்ள சிறிலங்கா அரசிற்கு முண்டுகொடுக்கும் இந்திய அரசின் செயலானது, ஈழத் தமிழ் மக்களைக் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது" - என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் 10-02-2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசுக்குத் துணையாக, இந்தியா மேற்கொள்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையில் "இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப் படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழிப்பிற்கு, இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளை, "வரலாற்றுத் தவறு" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா, தமிழீழம், சிறிலங்கா குறித்த சில வரலாற்றுத் தகவல்களை முன்வைத்துச் சில கருத்துக்களைத் தர்க்கிப்பதானது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம். நாம் கடந்த பல ஆண்டு காலமாக இந்தக் கருத்துக்களை வலியுறுத்தி வந்துள்ள போதிலும், தற்போதைய காலகட்டத்தில் இவை குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய தேவையும் உள்ளது.
ஒரு நாட்டினது ஆட்சி, அரசியல் கட்சிகளிடையே கை மாறுகின்றபோது, பொதுவாக அந்த நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் பெரிதான மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பதே உண்மையாகும்! குறிப்பாக, அந்த நாடு ஒரு வல்லரசாக இருக்கும் பட்சத்தில், அந்த வல்லரசு நாட்டின், வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவது மிக அரிதான செயலாகவே இருக்கும்.
எனினும், அண்டை நாடான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளை நாம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாது கேந்திர, பொருளாதாரவியல் போன்றவற்றின் அடிப்படையிலும் கவனித்துச் சிந்திக்க வேண்டும். அந்த வகையில் சில முக்கிய கருத்துக்களைத் தரக்கிக்க விழைகின்றோம். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களின் அன்புக்குரிய மாமியார் திருமதி இந்திரா காந்தி அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில், தனது அரசின் ஊடாகத் தமிழ்ப் பேராளி இயக்கங்களுக்கு ஆதரவையும், இராணுவப் பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்கி வந்தார் என்பது வெளிப்படையான ஓர் இரகசியமாகும். அத்துடன் அன்றைய சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள் மீது மேற்கொண்ட அரச பயங்கரவாத இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்திரா காந்தி அறிக்கைகளை வெளியிட்டு வந்ததோடு, சிறிலங்கா அரசு மீது, அரசியல் அழுத்தங்களையும் பிரயோகித்து வந்தார்.
இந்தியாவின் அன்றைய பிரதமரான இந்திரா காந்தியின் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாகத் தமிழீழ மக்கள் அவர்மீது மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தார்கள். அப்படியென்றால், ஈழத் தமிழ் மக்கள் பிரச்சனையில், அன்று இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில், இந்தியா கொண்டிருந்த வெளிவிவகாரக் கொள்கைக்கும், பின்னாளில் இந்தியா கொண்டிருக்கின்ற வெளிவிவகாரக் கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளதே என்ற கேள்வி எழுவது இயல்பானதாகும். ஆனால், கூர்ந்து சிந்தித்துப் பார்த்தால், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படை நோக்கத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற உண்மை புலனாகும்.!
அன்றைய வேளையில், ஜே.ஆர், ஜெயவர்த்தனாவின் சிங்கள அரசு, தனது இந்திய எதிர்ப்புப் போக்கை வெளிப்படையாகக் கொண்டிருந்ததோடு மட்டும் அல்லாது பாகிஸ்தான், žனா, அமெரிக்கா போன்ற இந்திய நலன்களுக்கு எதிரான நாடுகளுடன் நெருங்கிய நட்புறவையும் கொண்டிருந்தது. பிராந்திய வல்லரசான இந்திரா காந்தியின் அரசோ, அன்று, ஓர் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் யூனியனுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டிருந்தது. தனது நலன்களுக்கு எதிரான நாடுகளுடன் சிறிலங்கா அரசு நட்புறவைக் கொண்டிருந்த காரணத்தால், அந்த நாடுகளின் தலையீடும், செல்வாக்கும் இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதானது, தன்னுடைய பிராந்திய நலனுக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்று அன்றைய இந்திய அரசு கருதியது. அந்த வேளையில் இலங்கை விவகாரத்தில், தன்னுடைய மூக்கை நுழைப்பதற்கு, இந்தியாவிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக, ஈழத்தமிழர் பிரச்சனை விளங்கியது. அதனை முழுமையாகப் பயன்படுத்தும் முயற்சியில் இந்திரா காந்தி இறங்கித் தமது பிராந்திய மேலாண்மையை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
"ஈழத் தமிழர் போராட்டமானது, ஜே.ஆர், ஜெயவர்தனாவின் அரசிற்கு ஒரு தீராத தலையிடியாக உருவாகுவதன் மூலம், ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு, இந்தியாவின் உதவியை நாடி வரவேண்டும்" என்றே இந்திரா காந்தி விரும்பினார். அதுவே உண்மையுமாகும். தவிரவும், திருமதி இந்திரா காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட சில மாதங்களின் பின்பு, அவருடைய அரசியல் வாழ்க்கை குறித்து ஒரு நூல் வெளி வந்தது. அதனை எழுதியவர் இந்திரா காந்தியின் பிரத்தியோகச் செயலாளர் ஆவார். அவர் சிறிலங்கா அரசையும், தமிழர் பிரச்சனைளையும், தமிழப் போராளிகள் இயக்கங்களைப் பற்றியும் இந்திரா காந்தி கொண்டிருந்த சிந்தனைகளை விவரித்து எழுதியிருந்தார். நாம் மேற்கூறியிருந்த விசயங்களை, அவர் தனது நூலில் உறுதி செய்து எழுதியுள்ளார்.
இங்கே இன்னுமொரு மிக முக்கியமான விசயம் ஒன்றை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து, இந்திரா காந்தி அவர்கள் கொண்டிருந்த கணிப்பையும் இவரது பிரத்தியோகச் செயலாளர் தன்னுடைய நூலில் அன்றே குறிப்பிட்டுள்ளார். "ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட, தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும், கொள்கைப் பிடிப்பு உடையவர்களாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளார்கள். எதிர்காலத்தில், இந்தியாவின் அழுத்தத்திற்கு, விடுதலைப் புலிகள் பணிய மாட்டார்கள். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம், தன்னுடைய இலட்சியத்தில் உறுதி கொண்ட ஓர் இயக்கமாக வளர்ந்து வருகின்றது. அவர்களின் வளர்ச்சியை நாம் தடுக்க வேண்டும் (We will have to cut them to size)" - என்று மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றிக் கொண்டிருந்த எண்ணங்களை அவரது பிரத்தியோகச் செயலாளர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.
இங்கே இன்னுமொரு விசயத்தையும் நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளை - குறிப்பாக இலங்கைத்தீவு சம்பந்தப்பட்ட கொள்கைகளை - ஒரு குறிப்பிட்ட அதிகாரக் குழுவினர்தான் தொடர்ந்தும் நிர்ணயித்து வருகின்றார்கள். இந்திய உளவுப் பிரிவான RAWவின், SOUTH BLOCK என்று அறியப்படும் பகுதியினர், இலங்கைக்கான வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பவர்களில் தொடர்ந்தும் செல்வாக்காக இயங்கி வருகின்றார்கள். இவர்களுடைய முழுமையான செயற்பாடுகளை விவரிப்பதற்கு இது தளம் இல்லையென்றாலும், தம்முடைய வர்க்க நலன் கருதி, தமிழீழ மக்களின் நலனுக்கு எதிரான செயற்பாடுகளைத்தான் இவர்கள் தொடர்ந்தும் செய்து வருகின்றார்கள் என்பதனை இங்கு பதிவு செய்து கொள்கின்றோம்.
ஆனால், தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவின் நலனுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளார்கள். இந்தியாவுடனான உளப்பூர்வமான, ஆத்மார்த்தமான நட்புறவை நாடி, தன்னுடைய உள்ளக்கிடக்கையை, விருப்பத்தை, வேண்டுகோளை, தமிழீழத் தேசியத் தலைமை தொடர்ந்தும் தெரிவித்தே வந்துள்ளது.
இயக்கத்தின் மீது இந்தியாவின் அரசியல்- இராணுவ அழுத்தங்கள், செயற்பாடுகள் இருந்தபோதிலும் சரி, இந்த அரசியல் - இராணுவ அழுத்தங்களை எதிர்கொண்டு வெற்றி கொண்ட வேளைகளிலும் சரி, சிங்களப் பேரினவாத அரசுகள் மேற்கொண்ட போர்களில் இயக்கம் வெற்றி கொண்ட வேளைகளிலும் சரி, அரசியல் வெற்றிகளை அடைந்திட்ட வேளைகளிலும் சரி, தமிழீழத் தேசியத் தலைமை, தன்னுடைய உள்ளக் கிடக்கையை, இந்திய தேசத்தின் மீதான தன்னுடைய நட்புணர்வை வெளிப்படையாகவே காட்டி வந்துள்ளது.
வரலாற்றிலிருந்து சில சம்பவங்களைச் சுட்டிக் காட்டுவது இவ்வேளையில் பொருத்தமானதாகும். தமிழ் மக்களின் ஒப்புதலைப் பெறாது, அவர்கள் மீது இலங்கை - இந்திய ஒப்பந்தம் திணிக்கப்பட்ட காலகட்டத்தில், அதாவது சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு, 1987 ஆம் ஆண்டு, சுதுமலையில் தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்றிய உரையின் போதும், இந்தியாவுடனான நட்புறவை வலியுறுத்திப் பேசியிருந்தார்.
"இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, தமிழ் மக்களுக்கு உரிமை எதையும் பெற்றுத் தாரது" என்பதையும், "இந்த ஒப்பந்தத்தைத் தாம் ஏற்கவில்லை" என்பதையும், "இந்தியாவின் கேந்திரச் செல்வாக்கானது, தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தோடு உரசுகின்றது" என்பதையும் விளக்கிய தேசியத் தலைவர், இன்னுமொரு விசயத்தையும் அன்று வலியுறுத்தியிருந்தார்.
"நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். நாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர்" என்று தமது நிலைப்பாட்டைத் தேசியத் தலைவர் அன்றே தெளிவாகக் கூறியிருந்தார். தமிழீழத் தேசியத் தலைவரின் அந்தக் கூற்று, நேர்மையானதாகவும், தெளிவாகவும் இருந்தது. அப்போதைய இந்திய அரசின் தெளிவற்ற சிந்தனையில் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விமர்சித்த தலைவர், அதே வேளையில், இந்திய தேசத்தின் மீதான தம்முடைய நட்புறவையும் தெளிவுபடுத்தியிருந்தார்.
"இந்தியாவின் இறை€யாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், அதன் மக்களுக்கும், விடுதலைப் புலிகள் அடிப்படையில் எதிரானவர்கள் அல்லர்!"- என்ற திடமான, தெளிவான சிந்தனையை அன்றே தலைவர் வெளிப்படுத்தியிருந்தார். அன்றைய இராஜதந்திரிகளினதும், இந்திய உளவுப் பிரிவினரதும், அன்றைய அரசியல்வாதிகளினதும், தவறான கணிப்புக்களாலும், செயல்களாலும், பின்னாளில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே போர் மூண்டு கசப்புணர்வுகள் தோன்றினாலும், இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டுக்கும், இந்திய மக்களுக்கும், அடிப்படையில் விடுதலைப் புலிகள் எதிரானவர்கள் அல்லர் என்ற எண்ணத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
பின்னர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும், இந்தியவுடனான நட்புறவு குறித்து தேசியத் தலைவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். 1987 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக இருந்தன. ஆனால் 2002 ஆம் ஆண்டு சமாதான சூழ்நிலை ஏற்பட்ட வேளையில், புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக, விசுபரூபம் எடுத்து இருந்தன. ஆனால், அந்த இரண்டு வித்தியாசமான காலப் பகுதிகளிலும், தமிழீழத் தேசியத் தலைவர், இந்தியாவின் நட்புறவு குறித்து ஒரே கருத்தைத்தான் கொண்டிருந்தார். m
பின்னர் சிறிலங்கா அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிய போதும், இந்தியாவின் அனுசரணையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நாடி நின்றதை நாம் அனைவரும் அறிவோம். சமாதானப் பேச்சுவார்த்தைகளை, விடுதலைப் புலிகளின் சார்பில் முன்னின்று நடாத்திய, "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள், அவ்வேளையில் இந்தியாவின் அனுசரணையைப் பல வழிகளில் நாடியது நாடறிந்த செய்தியாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்திய அரசு அன்றும் விடுதலைப் புலிகளின் நேசக்கரத்தைப் புறம் தள்ளியது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும், இந்தியா மீதான தமது நட்புறவை வெளிப்படுத்தியே வந்துள்ளார்கள்.
2003 ஆம் ஆண்டும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான திரு வே.பாலகுமாரன் அவர்கள் தேசியத் தலைவரின் இந்தக் கருத்துக்களை அடிக்கோடிடும் வகையில் உரையாற்றியிருந்தார்.
"இந்தியாவின் பிராந்திய அரசியலில், எந்தவிதமான குழப்பத்தையும் கொண்டுவர நாங்கள் தயாராக இல்லை. எனவே இந்தியா, புலிகளை இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டும். நாங்கள் என்றைக்கும் இந்தியாவின் போக்குக்கு எதிராகச் செயல்பட விரும்பியதில்லை. எம்மோடு இந்தியா நேர்மையாக உறவு வைக்க முன்வந்தால், நாங்களும் இணக்கமாகச் செயல்படத் தயாராக இருக்கின்றோம். அவர்களாகவே உருவாக்கிக் கொண்டால் அன்றி, எம்மோடு மோதுவதற்கு இந்தியாவிற்கு எந்தக் காரணமும் கிடையாது..." என்று திரு வே. பாலகுமாரன் அவர்கள் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.
"தேசத்தின் குரல்" திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களும், மீண்டும் பல தடவைகள் இந்தியாவுடனான நட்புறவை வெளிப்படுத்தியிருந்ததோடு, இந்திய வெளியுறவில் மாற்றம் வரவேண்டும் என்றும் தெரிவித்து வந்திருக்கின்றார். அத்தோடு பிரிகேடியர் திரு சு.ப.தமிழ்ச்செல்வன், சமர் நூலாக்கப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஆகியோரும் இத்தகைய நட்புக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் தெரிவித்தே வந்துள்ளார்கள். இந்திய அமைதி காக்கும் படையினருடனான போர் குறித்து, நாம் விருப்பு - வெறுப்பின்றிச் சிந்தித்துப் பார்த்தால், அதில் ஓர் அடிப்படை நியாயம் தமிழர் பக்கம் இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். சுருக்கமாகக் கூறினால், ஈழத் தமிழர்கள் குறித்த ஆனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்க முடியாத ஒப்பந்தம் ஒன்றை, ஈழத் தமிழர்கள் மீது திணிக்க முயன்றபோது, தனது உரிமையையும் சுதந்திரத்தையும் காப்பாற்ற ஈழத் தமிழினம் போராடியது.
இதனையே மறுவளமாகச் சிந்தித்துப் பார்ப்போம். இதே போல், வேறு ஒரு வல்லரசு, இந்தியா குறித்த ஆனால் இந்திய மக்கள் சம்பந்தப்படாத, இந்தியாவின் பிரச்சனையைத் தீர்க்க முடியாத ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மீது திணிக்க முனைந்திருந்தால் இந்தியா என்ன செய்திருக்கும்? இந்தியாவும், ஈழத் தமிழினம் போன்றே தன்னுடைய உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடியிருக்கும்.
இதில் இருக்கின்ற அடிப்படை நியாயம் ஒன்றுதான்! இதனைப் புரிந்து கொள்வதும் கடினமான ஒன்று அல்ல! இந்தியாவிற்கும், இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் ஆதரவாக இருப்பது தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும்தான் என்கின்ற எமது கருத்தை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். இன்று தமிழீழத்திற்கு உரித்தான கடற்பரப்பின் பல பகுதிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால்தான், இன்று இந்தியாவின் கடற் பிராந்திய நலன், உண்மையான பாதுகாப்பு நிலையில் உள்ளது.
மாறாக, இந்தக் கடற்பிராந்தியப் பகுதிகள், சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமேயானால், இந்தப் பகுதிகளுக்குள் இந்திய விரோத சக்திகள் குடிபுகுந்திருக்கும். இந்தப் பகுதிகளையெல்லாம் இந்தியாவிற்கு எதிரான நாடுகளிடம், சிறிலங்கா அரசு குத்தகைக்கும் விட்டிருக்கும். இங்கே சந்தேகத்திற்கு இடமான விசயமொன்றைச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். கடந்த ஆண்டு, காலித் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளானது. அத் தாக்குதல் குறித்த முழுமையான செய்திகள் வெளிவராதவாறு, சிறிலங்கா அரசு மறைத்து விட்டது. ஆனால் எமக்குக் கிடைக்கப்பெற்ற சில தகவல்கள் புதிய சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன.
"காலித்துறைமுகத்தில் இருந்த ஆயுதக் களஞ்சியம், சிறிலங்காவிற்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியம் அல்ல" என்றும், "அது வேறு ஒரு நாட்டிற்குச் சொந்தமானது" என்றும், சில தகவல்கள் கசிந்து வந்திருந்தன. "žனாவின் அமைப்புக்களில் ஒன்றான நொரிங்கோவிற்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியம்தான் தாக்கப்பட்டது" என்றும், "காலியில் žனாவின் ஆயுதக் களஞ்சியம் வைக்கப்படுவதற்காக, சிறிலங்காவோடு ஒப்பந்தம் ஒன்றை žனா முன்னர் கொண்டிருந்ததாகவும்" செய்திகள் உலாவின. இந்தியாவின் பிராந்திய நலனுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக் கூடிய இந்த விசயம் உண்மைதானா? இந்தியா இவ்விசயங்களை உணராதது போல் இருந்தாலும், இந்தியாவிற்கான சார்பு நிலையில்தான் விடுதலைப் புலிகளும் தமிழீழ மக்களும் இருக்கக்கூடிவர்கள் என்ற யதார்த்த நிலையை அமெரிக்கா உணர்ந்து வைத்துள்ளது.
திருகோணமலை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, சிங்களவர்கள் கையில் இருந்தால், அது தனக்குச் சாதகமானது என்றும், தேவைப்பட்டால், திருகோணமலையை, இந்தியாவிற்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என்றும், அமெர்க்கா எண்ணிச் செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில்தான் கிழக்கு மாகாணத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அடித்துத் துரத்தப்படுவதையும், அங்கே சிங்களப் பௌத்தக் கோவில்கள் கட்டப்படுவதையும். அமெரிக்கா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது. இவ்வளவற்றையும் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்ற இந்தியாவோ, பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருண்டு விட்டது என்பது போல், மௌனமாக இருந்து வருகின்றது. இந்தியாவின் பூகோள நலன் ஈழத் தமிழர்களோடு இணைந்த ஒன்றாகும். பண்டைக் காலத்திலிருந்தே, வரலாற்று ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, அரசியல் பொருளாதார ரீதியாக, ஈழத் தமிழினத்திற்கும், இந்தியாவிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளதை வரலாறு கூறும். அடிப்படையில் சிங்கள தேச மக்கள் இந்தியாவின் நலனுக்கு எதிரான எண்ணங்களைக் கொண்டிருக்கையில், தமிழீழ மக்கள் இந்திய தேசத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்து வந்துள்ளார்கள். தவிரவும், சிறிலங்கா அரசுகளின் இந்திய விரோத மனப்பான்மை என்பதானது, ஒரு வெளிப்படையான விசயமுமாகும்.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல விசயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். இந்திய-žன யுத்தத்தின் போதும், இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போதும், சிறிலங்கா அரசுகள் இந்தியாவின் நலனுக்கு எதிரான கோட்பாடையும், செயல்பாடுகளையும் கொண்டிருந்தன. இந்திய - žனா யுத்தத்தின் போது, இலங்கைத் தமிழ் மக்கள், இந்திய அரசுக்கு அனுப்புவதற்காக நிதி சேகரிப்பை நடத்தி, அவ்வாறு சேகரித்த நிதியை, இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் கையளித்தார்கள். ஆனால் அந்த நிதியை, இந்தியாவிற்கு அனுப்ப விடாமல் சிறிலங்கா அரசு தடை செய்து விட்டது. ஒருகால கட்டத்தில் இந்தியத் திரைப்படங்கள், சஞ்சிகைகள், போன்றவற்றின் இறக்குமதியையும் சிறிலங்கா அரசு மட்டுப்படுத்தியிருந்ததையும் நாம் அறிவோம். சிறிலங்காவின் பொருளாதார நலன் குறித்த அக்கறையையும் விட, தமிழ்-இந்திய வெறுப்பு மனப்பான்மைதான் சிங்கள அரசுகளிடம் மேலோங்கி இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த உடனேயே, இந்திய வம்சாவழித் தமிழர்களை, இந்தியாவிற்கு அனுப்பி விடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வரலாற்றின் அவமானகரமான அடையாளங்களாகும்! சிங்கள மக்கள், சிங்கள அரசுகள், சிங்களத் தலைவர்கள் என்று சகல மட்டங்களிலும், இந்த வெறுப்புணர்ச்சி மேலோங்கி நிற்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் (1985) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் சிறிலங்கவின் கிரிக்கெட் குழு, இந்தியாவின் கிரிக்கெட் குழுவினை வென்றதைக் கொண்டாடும் விதமாக, ஒரு நாளை, பொது விடுமுறை தினமாகவே, ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா அறிவித்ததை ஓர் உரிய உதாரணமாக நாம் இங்கே சுட்டிக் காட்டலாம். "ஜே.ஆர் ஜெயவர்த்தனா வெறுப்பது இந்தியாவை மட்டுமல்ல, இந்திராவையும் கூடத்தான்!" - என்று மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் (தனிப்பட்ட உரையாடலின்போது) தெரிவித்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கதாகும். சிறிலங்கா அரசும், இந்திய அரசும் கைச்சாத்திட்ட அந்த ஒன்றுக்கும் உதவாத ஒப்பந்தத்தையே இன்று சிறிலங்கா அரசு தூக்கி எறிந்து விட்டது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள குறைகள் பற்றியும், நிறைவற்ற தன்மை பற்றியும், இவற்றைக் கூட சிறிலங்கா நிறைவேற்ற மாட்டாது என்பதையும், விடுதலைப் புலிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.
ஆனால் இந்தியா, சிறிலங்கா அரசை நம்பியது. நம்பிய இந்திய அரசுக்கு நாமம் போட்டு விட்டது சிறிலங்கா அரசு. தங்களுடைய கடந்த காலச் செயல்பாடுகள் மூலம் சிறிலங்கா இந்தியாவிற்குச் சில செய்திகளைச் சொல்லியுள்ளது. இந்தியா இவை குறித்து இனியாவது தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இந்தியாவிற்கு, சிறிலங்கா சொல்லும் செய்திகள்:- - எமது நடவடிக்கைகள், தமிழர்களுக்கு எதிரானது என்பதற்கு அப்பால், இந்தியாவிற்கு எதிரான, இந்தியாவின் இராஜதந்திரத்திற்கு எதிரான எமது நிலைப்பாட்டின் நடவடிக்கைகளேயாகும். - நீங்கள் (இந்தியா) நல்ல நோக்கம் என்று நினைத்துக் கொண்டு வருகின்றவற்றை, நாங்கள் ஏதாவது ஒரு வகையில் முறியடித்தே தீருவோம். - உங்களுடைய பிராந்திய நலனக்கு எதிராக நாம் செயல்படுவோம். - இந்தியா ஊடாகத் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றால், இந்தியாவிற்கு எதிராகச் சிறிலங்கா இயல்பாகவே திரும்பும் என்பதுதான் அடிப்படையான விசயமாகும்.
இவ்வாறான செய்திகளை சிறிலங்கா அரசு, இந்தியாவிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள், பல்வேறு சமயங்களிலும், தொடர்ந்தும் என்ன விதமான செய்திகளை இந்தியாவிற்குத் தெரிவித்து வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்குச் சொல்லும் செய்திகளும், நிலைப்பாடுகளும்:-
இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்குப் பங்கம் விளைவிக்க, விடுதலைப் புலிகள் விரும்பவில்லை.
இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் விடுதலைப் புலிகள் எதிரானவர்கள் அல்லர்.
இந்தியாவின் தேசிய நலன்களுக்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருக்கப் போவதில்லை.
இந்தியாவின் புவியியல், கேந்திர நலன்களுக்கு எதிராக, விடுதலைப் புலிகள் செயல்படுபவர்கள் அல்லர்.
இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குப் பங்கம் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் விரும்பவில்லை.
மாறாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்புவதும், நாடி நிற்பதுவும்தான் என்ன?
விடுதலைப் புலிகள் இந்தியாவை நேசிக்கின்றார்கள். இந்திய மக்களை நேசிக்கின்றார்கள்.
இந்தியாவுடன் உண்மையான நல்லுறவைப் பேணவே, விடுதலைப் புலிகள் விரும்புகின்றார்கள்.
இந்தியாவை ஒரு நட்புச் சக்தியாகவே, ஒரு நேச சக்தியாகவே விடுதலைப் புலிகள் கருதுகின்றார்கள்.
இந்தியாவுடன் நட்புறவுடன் இணங்கிச் செயற்பட விடுதலைப் புலிகள் மனப்பூர்வமாக விரும்புகின்றார்கள்.
தமிழ் மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும், வேட்கைகளையும் இந்தியா புரிந்து கொண்டு எமக்கு நீதியான ஆதரவைத் தர வேண்டும்.
இப்போதைய வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒரு செய்தியை இந்தியாவிற்கு சொல்லியிருக்கின்றார்கள்.
"ஈழத் தமிழர்களுக்கு எதிரான, இந்திய நலன்களுக்கு எதிரான, சிங்களச் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகின்ற வரலாற்றுத் தவறை இந்தியா செய்யக் கூடாது" என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது தெரிவித்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளினதும், தமிழீழ மக்களினதும், இந்த நேர்மையான உணர்வுகளை அறிந்து கொண்டு அவர்களது நியாயமான வேண்டுகோள்களை இந்தியா ஏற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. அதற்குரிய செயல்பாடுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இன்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் யாவும் (சிறிலங்கா உட்பட) இந்தியாவிற்கு எதிராகவே, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதை இந்தியா அறியும்! எதிர்காலத் தமிழீழத் தனியரசு ஒன்றுதான் இந்தியாவின் மிக நெருங்கிய நேசநாடாக விளங்க முடியும் என்பதுவும் இந்தியா அறியாதது அல்ல! சிந்திக்க வேண்டும் இந்தியா! நீதியின்பால், நியாயத்தின்பால் செயல்படவும் வேண்டும்! இந்த ஆய்வு ஆஸ்திரேலியா மெல்பேர்ன் "தமிழ்க்குரல்" வானொலியில் (17.03.08) ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும். நன்றி: . தமிழ்நாதம்

November 19, 2008

இவை பேசும் படங்கள் . . .

எதிலும் நேர்மறையான சிந்தனை வேண்டுமாம். அம்மாவில் துவங்கி ஆசிரியர், உயர் அதிகாரி வரை பலராலும் எனக்கு அருளப்பட்ட வாசகம் இது. இந்த வாக்கினை நினைவில் கொண்டு இணையத்தில் பார்வை செலுத்திய போது கண்ணில் பட்ட படங்களும், அதற்கான நேர்மறையான சிந்தனைகளும்.இவை பேசும் படங்கள்...
வீட்டில் ஜன்னல் இல்லை என்ற வெகுநாள் ஏக்கத்தை நிறைவேற்றிவிட்டது இலங்கை ராணுவம். இதோ எங்கள் வீட்டின் நவீன வகை ஓவியத்துடனான ஜன்னல்......
‘‘மேஜையில்லாத பள்ளியில் எத்தனை நாள் படிப்பது. நல்லவேளை ராணுவ தாக்குதலில் பள்ளியை இழந்தபோதும், ராணுவ குண்டு அடைக்கும் களன்கள் எங்களுக்கு மேஜையாகி கிடைத்து விட்டன’’
‘‘ராணுவ தாக்குதல் மட்டும் நடக்காமல் இருந்தால், நான் எப்படி துப்பாக்கி ஏந்த கற்றுக்கொள்வது. துப்பாக்கி பயிற்சிக்கு வித்திட்ட இலங்கை ராணுவத்துக்கு நன்றி’’
‘‘சூரிய ஒளியில் சமையல் திட்டம் போல், மழையிலும் சமைக்கும் திட்டம். கற்றுத்தந்தது இலங்கை ராணுவத்தின் அட்டூழியம்’’
‘‘வீட்டையும், குளியலறையும் இழந்தபோதும், ராணுவ தளவாட பெட்டி கிடந்ததால், தம்பி குளிக்க நேர்ந்தது. அவர்கள் மட்டும் இந்த பெட்டியை இங்கு விட்டு சென்றிருக்காவிட்டால்...’’
‘‘படிக்க மட்டுமே தெரிந்திருக்க எங்களுக்கு, அம்மாவையும், அப்பாவையும் கொன்று குவித்து மீன் பிடி தொழிலை கற்றுத்தந்திருக்கிறது இலங்கை ராணுவம். ராஜபக்ஷேவுக்கு நன்றி கூறுங்கள் ராணுவத்தினரே’’

September 13, 2008

தமிழகத்தில் கேபிள் இணைப்பு இலவசம்?

உளி-யின் ஓசை படத்-தின் மூலம் முதல்-வர் கரு-ணா-நி-திக்கு கிடைத்த ரூ.25 லட்-சத்-தில்(?) வரு-மானவரி போக ரூ.18 லட்-சத்தை, தலா ரூ.20 ஆயிரம் வீதம் நலிந்த தொழில்நுட்-பக் கலை-ஞர்-களுக்கு வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, ரூ.1க்கு கிலோ அரிசி என்பது என் கற்-ப-னை- யில் உதித்த திட்-டம் அல்ல. 1967ல் அண்ணா திட்-ட-மிட்-டது. அப்-போ-தி-ருந்த பொரு-ளா-தாரநிலை அவர் லட்-சி-யத்தை ஈடு-செய்ய போது-மா-னதாக இல்லை. அண்ணா நூற்-றாண்டு விழா நேரம்-தான் சரியான நேரம் என்று திட்-ட-மிட்டு இப்-போது தொடங்-கப்-பட்-டுள்-ளது. ஏழை, நடுத்-தர மக்-களை கவ-ரக் கூடிய ஒரு புதிய திட்-டம், காந்தி பிறந்த நாளான அக்-டோ-பர் 2ம் தேதி தொடங்-கப்ப-டும். அது என்ன திட்-டம் என்-பதை இப்-போது சொல்லவிரும்பவில்லை,’’ என தெரிவித்துள்ளார். ஆஹா மறுபடியுமா? இலவச கலர் டிவி, இலவச காஸ், ரூ.2க்கு கிலோ அரிசி, ரூ.1க்கு கிலோ அரிசி என அடுத்தடுத்த அறிவிப்புகளால் தன்னை சார்ந்தவர்களை இன்புறுத்திய கருணாநிதி அடுத்த திட்டத்தை அறிவிக்கப்போகிறாரா? என தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. அவரே சஸ்பென்சுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் யூகங்களுக்கு வழி காட்டியிருக்கிறார் கருணாநிதி. சரி அது என்ன புதிய திட்டம். இப்போதைய சூழலுக்கு இது இலவச கேபிள் இணைப்பு திட்டமாகத்தான் இருக்க கூடும். தமிழகத்தில் கிளம்பியுள்ள மின்தடை பிரச்னை மற்றும் கேபிள் பிரச்னை ஒரு சேர தீர்க்க இது தான் சரியான திட்டமாக அமையும். இதில், தன்னை சார்ந்த சிலர் பாதிக்கப்படக்கூடும் என்றபோதும், பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள சூழலில், இது அவசியமாகிறது. அரசு கேபிள் துவக்கம், மாறன் சகோதரர்களுடனான மோதலுக்கு பழி தீர்ப்பது போன்றவைக்கு இது பயன்படும். அது சரி அக்டோபர் 2ம் தேதி வரை பொறுத்திருப்போம். இலவச கேபிள் இணைப்பு திட்டத்துக்கு . . .

September 11, 2008

பொது செயலாளர் பதவிக்கு உரியவரா ஜெ.?

மீண்டும் அ.தி.மு.க.வின் பொது செயலாளராக தேர்வு (?) செய்யப்பட்டுள்ளார் ஜெயலலிதா. அ.தி.மு.க. பொது செயலாளராக தேர்வு (?) செய்யப்படுவது இது 6வது முறையாம். இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அ.தி.மு.க. தலைமை. எப்படியோ, அ.தி.மு.க.வின் உயரிய பொறுப்பான பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். அ.தி.மு.க. பொது செயலாளர், எதிர்கட்சித் தலைவர் என பல பதவிகள் அவரிடம் இருந்தாலும், அதை அவர் முறையாக நிர்வகிக்கிறாரா என்றால் இல்லை. தமிழகத்தில் பல்வேறு தரப்பிலான மக்கள், இடையூறில் சிக்கித் தவித்த போது, கொடநாடு எஸ்டேட்டில் அவர் தங்கியிருந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். 6வது முறையாக பொது செயலாளர் ஆனபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தை உடனடியாக துவக்குவதாக அறிவித்துள்ளார். மக்கள் இடையூறுகளில் சிக்கித்தவித்த காலங்களில் அவர்களுக்காக களத்தில் இறங்கி போராடாமல், எஸ்டேட்டில் ஓய்வு எடுத்தவாறு அறிக்கை விட்ட ஜெயலலிதா, தேர்தலுக்காக தங்களை சந்திப்பதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் நம்மை நோக்கி வரும் அவரை வரவேற்போம். ஆனால், அவருக்கு தான் வாக்களிப்போம் என முடிவு செய்து விடாதீர்கள். மக்கள் விரோத போக்கு; நேர்மையற்ற ஆட்சி என தி.முக. அரசை நோக்கி ஜெயலலிதா முன்வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும், அவர் ஒருமுறை தன்னை நோக்கியும் கேட்டுக்கொண்டு இந்த பிரசாரத்தை துவங்கட்டும். ஒரு நாளில் 20 மணி நேரம் பணியாற்றுவேன் என ஆட்சியில் இருந்த போது கூறிய அவர், மக்கள் நலனுக்காக எதிர்கட்சி தலைவியாக போராடட்டும். மக்கள் பிரச்னைகளுக்கு அறிக்கையை மட்டும் வெளியிடாமல், அதற்கான தீர்வுகளுக்கு போராடட்டும். இவை யாவும் நீங்கள் முதல்வராவதற்காக அல்லாமல், எதிர்கட்சி தலைவர் என்பதற்கும், பிரதான கட்சியின் பொது செயலாளர் என்பதற்குமான அடையாளங்களாக இருக்கட்டும். நீங்கள் வருங்கால முதல்வராவது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அ.தி.மு.க. பொது செயலாளர் என்பதற்கும், எதிர்கட்சி தலைவர் என்பதற்கும் நீங்கள் பொருத்தமானவரா என்பதை உறுதிசெய்யுங்கள்.

April 19, 2008

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

‘ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வந்த பெண் மயக்கமானார்’ கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவையில் நடந்தது இந்த சம்பவம். அதிகாரிகளின் அலைக்கழிப்பே இதற்கு காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார் அந்த பெண். அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காத (அரசு) அதிகாரிகள், சம்பவம் நடந்த அடுத்த நாள், அவரது கோரிக்கையை அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டனர்.

காயம்பட்ட குழந்தை, ஆறுதல் கூறும் அம்மாவின் கால்களை கட்டி, பீறிட்டு அழுவது போல, செய்தியாளர்களிடம் கண்ணீர் கொப்பளிக்க பேசினார் அந்த பெண். ஆனால், தி.மு.க. உட்கட்சித் தேர்தல்; காங்கிரஸ் கோஷ்டி பூசல் விவகாரம் ஆகியவையே முக்கிய செய்திகள் என செய்தியாளர்களும், மக்களும் நினைத்ததால், அந்த செய்தி முக்கியத்துவத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்த தவறியது.

அரசு அலுவலகங்களில் மக்கள் அவமானப்படுத்துவதும், அலைக்கழிக்கப்படுவதும் என்ன புதிதா? இது நாள்தோறும் நடப்பது தானே? இதில் என்ன பரபரப்பு வேண்டிக்கிடக்கிறது என மக்கள் நினைத்திருக்கலாம். அந்த அளவுக்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் சர்வசாதாரணமாக நிகழ்கிறது இது போன்ற சம்பவங்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த அதே வாரத்தில், ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தினர் அரசு ஊழியர்கள். ஆறாவது ஊதியக்குழு ஜாக்பாட் அடித்தது போன்று ஊதியம் உயர்த்தப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அந்த பரிந்துரைகள் போதாது என போர்க்கொடி தூக்கியுள்ளனர் அரசு ஊழியர்கள்.

பெறுபவரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் தானம் வழங்குவது போல, அரசு ஊழியர்களிடம் வேலையை சரியாக பெறவும், அவர்களை பொறுப்புடன் செயல்படவும் வைக்காமல், அவர்களுக்கு ஊதியத்தையும், பிற படிகளையும் வாரி வழங்குகிறது. அரசு ஊழியர்களும் பிச்சை வாங்குவது போல, சம்பளம் பெறுவது ஒன்றே நோக்கம் என செயல்படுகின்றனர்.

பணி நேரத்தில் அரட்டை; கடமையை செய்யவும் லஞ்சம் என மனசாட்சியற்றவர்களின் கூடாரமா மாறி வருகிறது அரசு அலுவலகங்கள். ரூ.100 கொடுக்காமல் சாதி சான்றிதழ் எப்படி தருவார்கள் என மக்கள் (நியாயம்) பேசும் அளவுக்கு சர்வ சாதாரணமாகி விட்டது லஞ்சம் (ரசீது வழங்காததது ஒன்று தான் குறை). இதைப்பற்றியெல்லாம் அரசு ஊழியர்களுக்கு கவலை இருப்பதாக தெரியவில்லை. அரசு ஊழியர்களை பற்றி சமீபத்தில் பேசிய பெரும்பாலான கட்சிகள், அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளன. (தேர்தல் நேரத்தில் இவர்கள் தான் துணை என நினைத்தார்களோ என்னவோ?) மக்கள் காசில் வயிறு வளர்க்கும் அரசு ஊழியர்கள், மக்களுக்கு ஊதியம் வழங்கும் முதலாளிகள் வர்க்கத்தை போல நடந்து கொள்வது தான் இதில் உச்சகட்டம். மனிதாபிமானம் அற்று, ஐந்தறிவு ஜீவன்களை போல, வாழ்க்கை நடத்தி வரும் இவர்கள், பொதுமக்களை தங்களை விட சற்று குறைவான அறிவை கொண்ட ஜீவன்களாக மாற்றுவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது.

‘‘பாதகஞ் செய்பவரை கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா’’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல்களை படித்தவர்கள் நாங்கள். இந்த நிலை தொடர்ந்தால், உங்களை (அரசு ஊழியர்கள்) மோதித்தள்ளவும், முகத்தில் உமிழவும் வெகு நேரம் ஆகாது.

April 15, 2008

பெரியாருக்கு இடமில்லையா?



ஞாயிற்றுக்கிழமை இரவு அலுவலகப் பணி முடிய இரவு 10.30 மணியை எட்டியிருந்தது. மீண்டும் வீட்டுக்கு செல்ல வேண்டியது அவசியம் என்பதால், இரவு 11.00 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சத்தியமங்கலம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன். பொதுவாக பேருந்து பயணத்தின் போது, புத்தகத்தின் துணையில்லாமல் இருப்பதை நான் விரும்புவதில்லை. ஆனால், அன்று புத்தகம் என்னிடம் இல்லை. ஏதாவது ஒரு தமிழ் வார இதழ்களை வாங்கி புரட்டலாம் என நினைத்து புத்தக கடையை நோக்கி புறப்பட்டேன். கடைக்கு வெளியே நின்றபடி, இதழ்களில் உள்ள முக்கிய செய்திகளை குறிப்பிடும் சுவரொட்டிகளில் பார்வையை செலுத்தினேன். யூகங்களையே அடிப்படையாக கொண்ட புலனாய்வு இதழ்களின் அரசியல் கண்ணோட்டம்; சினிமாவை மட்டுமே பிரதானப்படுத்தும் சில இதழ்கள் என அடுத்தடுத்து நான் விரும்பத்தகாத புத்தகங்களின் சுவரொட்டிகள் எரிச்சல்படுத்தியது. வேறு வழியே இல்லை என நொந்து கொண்டு திரும்பிய போது, தேசிய கொடிகளின் மூவர்ண நிறத்தை கொண்டு இருந்த சுவரொட்டி என்னை கவனிக்க வைத்தது. ‘60 மகத்தான இந்தியர்கள்’ எனும் தலைப்பில் இருந்த அந்த சுவரொட்டி, ‘இந்தியா டுடே’ எனும் வார இதழின் உடையது. தேசிய அரசியலை ஆழமாக ஆராயும் வார இதழ் என்பதால், எனக்கு இந்தியா டுடே மீது மதிப்பு உண்டு. இருப்பினும், கவர்ச்சி இலை, ஆபாசம் தொடர்பான கணக்கெடுப்பு உள்பட அவசியமற்ற செய்திகள் என்னை எரிச்சல்படுத்த தவறியதில்லை. விடுதலைப்புலிகள் மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகளை பற்றிய கண்ணோட்டம் ஆகியவையும் இதில் முக்கிய இடம் பிடிக்கிறது. இருப்பினும் 60 வருட சுதந்திய இந்தியாவில், 60 மகத்தான இந்தியர்கள் என வரிசைப்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை அறிய புத்தகத்தை (ஆவலுடன்) வாங்கினேன். புத்தகத்தை வாங்கிக் கொண்டு திரும்புகையில், வெகுநேரமாக காத்திருந்த சத்தியமங்கலம் செல்லும் பேருந்து புறப்பட தயாராக இருந்தது. இரவு நேரம் என்பதால், பேருந்தில் கூட்டம் அதிகளவில் இல்லை. ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடி, புத்தகத்தை விரித்தேன். புத்தகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக ஆசிரியரிடமிருந்து எழுதப்பட்ட அரைப்பக்க கடிதத்தை படித்து முடிக்கும் முன், பயணச்சீட்டுடன் அருகில் வந்து நின்றார். பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு மீண்டும் புத்தகத்தை புரட்டினேன். பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி என நீண்ட 10 பேரின் பட்டியல் அடுத்த பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. கருத்துக்கணிப்பின் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டதாக கூறி, அவர்களுக்கு கிடைத்த வாக்குகளின் சதவீதமும் குறிப்பிடப்பட்டிருந்தது. பட்டியலை முழுக்க பார்வையிட்டேன். தொடர்ந்து, புத்தகத்தை புரட்டினேன். அகர வரிசையில் 60 தலைவர்களும் வரிசைப்படுத்தப்பட்டிருந்ததால், முதலில் சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கார் பெயரும் கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. பட்டியலில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ள தலைவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில், அம்பேத்கர் குறித்த கட்டுரையை பின்னர் படித்துக்கொள்ளலாம் என பார்வையை அடுத்த பக்கத்துக்கு செலுத்தினேன். சி.என்.அண்ணாதுரை என குறிப்பிடப்பட்டு இருந்த அடுத்த கட்டுரை, தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவை பற்றியது. உரிமை போராளி, திராவிட தலைவர் என முதல் இருவரது பெயரும் எனக்குள் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த, அடுத்தடுத்த பக்கங்களுக்கு விரைந்தேன். பாராட்டப்படும் தலைவர்களின் பெயர்களோடு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தொழிலதிபர்கள் தீருபாய் அம்பானி, ஜே.ஆர்.டி. டாடா, சதுரங்க போட்டியாளர் விஸ்வநாதன் ஆனந்த், மட்டைப்பந்து ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர், திரைப்பட இயக்குனர் பிமல்ராய் என 60 பேரின் பெயர் மற்றும் கட்டுரையோடு நீண்டது பட்டியல். 64 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை முழுவதுமாக புரட்டினேன். இந்த பட்டியில் மகாத்மா காந்தியடிகளால் பெரிதும் கவரப்பட்ட தந்தை பெரியாரின் பெயர் இடம் பெறவில்லை. ஏமாற்றமும், அதிர்ச்சியும் என்னவோ செய்ய, மீண்டும் கடைசியில் இருந்து புத்தகத்தை புரட்டினேன். இல்லை. அவரது பெயர் பட்டியலில் இல்லை. முன்னர் குறிப்பிட்டது போல, இந்த பட்டியல் ‘இந்தியா டுடே’ மீதான தன் எரிச்சலை அதிகரிக்க செய்தது. இதனால், அடுத்த சில நிமிடங்கள் புத்தகத்தை மூடி வைத்து விட்டு, ஜன்னல் வழியே பார்வையை செலுத்தினேன்.

பெரியார் பெயர் இடம்பெறவில்லை எனினும், பேரறிஞர் அண்ணாவின் பெயர் இடம்பெற்றது என்னை ஆறுதல் படுத்தியது. அந்த ஆறுதல் அண்ணாவைப்பற்றிய கட்டுரையை படிக்க என்னை தூண்டியது.
11ம் பக்கத்தில் உள்ள அவர் குறித்த கட்டுரையை வேகமாக எடுத்து வாசிக்க தொடங்கினேன். சில நிமிடங்கள் நிகழ்ந்த அந்த வாசிப்பு என்னை மேலும் எரிச்சல்படுத்தியது. மீண்டும் புத்தகம் மூடப்பட்டது ‘‘அண்ணாவை தனது வலது கரமாக்கினார் பெரியார். அதே அண்ணா பெரியாருக்கு எதிராக கலகமும் செய்தார்’’ ‘‘பெரியார் தவறவிட்ட ஆற்றலை கையில் எடுத்தது தான், அண்ணாவின் வெற்றிக்கு வித்திட்டது’’ ‘‘பெரியாரின் பொருத்தமில்லா திருமணம் தி.மு.க.வை உருவாக்கியது’’ என அண்ணாவை பெரியாருடன் ஒப்பிட்டு இருந்தது அந்த கட்டுரை. பெரியார் மீதுள்ள ஈர்ப்பால் மட்டுமே, அவருடன் இணைந்தார் அண்ணா; அரசியல் கட்சி துவக்குவதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துமோதலே தி.மு.க.வை உருவாக்கியது. ஆனால், அதேயே வேறு தோணியில் தெரிவித்திருந்தது அந்த கட்டுரை. அதில், குறிப்பிட்டிருப்பவை தவறல்ல. ஆனால், அவை குறிப்பிட்ட விதம் பெரியாரை விமர்சிப்பது போல் அமைந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. பெரியாரின் பல கொள்கைகள், அண்ணாவின் ஆட்சியின் போது, சட்டமாக்கப்பட்டன. ஆனால், அது தொடர்பாக ஒரு வரியும் அதில் இடம்பெறவில்லை. அதுமட்டுமல்ல மேடைப்பேச்சை தவிர, சுயமரியாதை திருமணம், மதுவிலக்கு போன்ற வியக்கத்தக்க அண்ணாவின் சாதனைகள், இதில் இடம்பெறவில்லை. அண்ணா குறித்த கட்டுரையில், பெரியார் தொடர்பாக எழுதப்பட்ட இந்த வாசகங்கள், பெரியார் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறாமல் போனது ஏன் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. சமுக நீதி காத்தவர்; சாதியை வேரறுத்தவர்; பகுத்தறிவை நிலைநாட்டியவர்; அனைவரும் சமம் என்ற சூழலை உருவாக்கியவர்; மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தியவர்; பெண்கள் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த முதல் தலைவர்; பெண் அடிமை தகர்த்தவர்; மக்கள் பிரதிநிதி மற்றும் 27 சிறப்பு நிலை பதவிகளால் மக்கள் தொண்டாற்றியவர் என நீளும் இவரின் சாதனைகள் மகாத்மா காந்தியடிகள் உள்பட பல்வேறு தலைவர்களை திரும்பி பார்க்க வைத்தது. ஆனால், இந்தியா டுடேயின் செய்திக்குழுவினருக்கு இவரும், இவரின் தொண்டும் தெரியவில்லையோ என்னவோ. ஒரு வேளை இவரின் கடவுள் மறுப்பு கொள்கை, இவர் பெயரை ஏன் இடம்பெறச்செய்ய வேண்டும் என நினைக்கத் தோன்றிருக்கலாம். கோடி கோடியாக பெற்று, விளையாட்டின் மூலம் இந்திய உணர்வையும், விளம்பரத்தின் மூலம் வெளிநாட்டு குளிர்பான மோகத்தையும் மக்களிடம் விதைத்து வரும் சச்சின் டெண்டுல்கருக்கும், இன்னும் சில விளையாட்டு வீரர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் இந்த பட்டியலில் இடம் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்காக அனைத்தையும் இழந்து, சமூக விடுதலைக்கு போராடிய பெரியாருக்கு இடமில்லை. திராவிடர் கழகத்தை உருவாக்கி போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை, திராவிடர் கட்சிகளே மறந்து விட்ட சூழலில், அவரால் எதிர்க்கப்பட்டவர்கள் அவரை மறந்துவிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியா டுடே ஆசிரியர் குழுவின் பார்வைகளில் இருந்து தந்தை பெரியார் விடுபட்டது துரதிஷ்டவசமானது. தொடர்ந்து, மற்ற தலைவர்களின் கட்டுரையை வேகமாக படித்து முடித்தேன். சிலரது பெயர்கள் இடம்பெற்றது சங்கடப்படுத்தியிருந்த போதும், மகாத்மாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் குறித்த கட்டுரை உற்சாகப்படுத்தியதை மறுக்க முடியாது. ஆனால், தந்தை பெரியாரின் இடம்பெற செய்யாததற்காக இந்தியா டுடே ஆசிரியர் குழுவை குட்டுவதை தவிர வேறு வழியில்லை. ‘‘முழு இதழையும் படித்து முடித்த பிறகு இதை ‘மகத்தான இதழ்’ என்று சொல்வீர்கள்,’’ இது இதழின் முதல் பக்கத்தில் இந்தியா டுடே ஆசிரியரிடமிருந்து எழுதப்பட்ட கடிதத்தின் கடைசி வரிகள், ஆனால், அவ்வாறு சொல்ல தோன்றவில்லை. பெரியார் தோணியில் கூற வேண்டுமானால், போங்கய்யா வெங்காயம் எனவே சொல்ல தோன்றியது.

April 13, 2008

அனுமதியும், ஆதரவும் . . .


பதிவர்களுக்கு வணக்கம்,
பதிவு பட்டறை அறிமுகமும், பதிவுகள் படிப்பதும் எனக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னரே அறிமுகமானது. பிறர் பதிவுகளை படிப்பதும், அதனை மனதுக்குள் மதிப்பிட்டுக்கொள்வதும் தான் என் வழக்கம். தேவைப்பட்டால் இந்த கருத்து என் நெருங்கிய நண்பர்களுடான விவாதத்துக்கு வரும். ஆனால், எந்த பதிவுக்கும் இதுவரை பின்னூட்டம் இடக்கூட நான் நினைத்ததில்லை.ஆரம்பம் முதலே பிறர் மனதை காயப்படுத்தாமல் இருப்பது நல்லது என்பது என் எண்ணம். இதனால், கூடுமானவரை நேரடி விமர்சனத்தில் இறங்கியதில்லை. மிக நெருங்கிய சிலரிடம் மட்டும் எனக்காக நான் விதித்துக்கொண்ட இந்த விதிகள் மீறப்பட்டதாக நினைவு. அதனால், எனக்கு ஏற்பட்ட இழப்புகள் கூட, இதுவரை நேரடி விமர்சனத்தை தவிர்ப்பதற்கு காரணமாக இருக்கலாம்.எனக்காக நான் விதித்துக் கொண்ட இந்த விதிகளை மீறி, நடக்க கற்றுக்கொள்ள முயலும் குழந்தை போல ‘‘மெல்லத் தெரிந்து சொல்’’ எனும் இந்த வலைப்பதிவு மூலம் விமர்சனத்தையும், தற்போதைய நடப்பையும் எடுத்துரைத்து உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.நடைபயலும் குழந்தை என்பதால், தடுமாறி விழவும் வாய்ப்புண்டு. தடுமாறி விழுந்தால் கரம் கொடுக்கவும், தயங்காமல் நடந்தாமல் தட்டி பாராட்டவும் உங்கள் கைகள் எனக்கு அவசியம். ஒரு சமயம் தடுமாறி விழும் எனக்கு உங்கள் கரம் கிடைக்காவிடில், வேறு ஏதாவது பிடிப்புடன் எழுந்து நடப்பது மட்டும் நிச்சயம்.
நன்றி.