September 23, 2009

‘சீமானுடன் நான்’

‘என்னை பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும், அவர் தமிழ் பற்று உடையவர் என்று கருதினால், அவருக்கு நான் அடிமையே ஆவேன்’. பெரியாரின் இந்த வார்த்தைகள் போதும், சீமானுடனான எனது இந்த சந்திப்பின் அர்த்தத்தை புரிய வைக்க.
நாம் தமிழர் இயக்கம். தேர்தலுக்கு பின்னதாய், திரைப்பட இயக்குனர் சீமானால் ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கம். ஜூன் 18ம் தேதி துவங்கிய இந்த இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மாநிலம் முழுவதும் சுழன்றடித்து கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி வருகிறார் சீமான். திருப்பூரில் கலந்துரையாடல் நடத்த வந்த தோழர் சீமானை தங்கும் விடுதியில் சந்திக்க நேர்ந்தது. ‘நாம் தமிழர் இயக்கம்’ பற்றியும், அதன் மீதான விமர்சனங்களை பற்றியும் பேச்சு தொடங்கியது.
‘நாம் தமிழர் இயக்கம்’ ஏன், எதற்கு?
ஈழத்தில் போர் உக்கிரமடைந்த போது, ஈழத்தில் இருந்த ஒவ்வொருவரும் ‘தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்கள் தங்களை காப்பார்கள்’ என நம்பினார்கள். ஆனால், என்ன செய்ய முடிந்தது. தனி தமிழீழம் ஏன் தேவை என்பதை தமிழக மக்களிடம் புரிய வைக்க நம்மால் முடியவில்லை. இதற்கு நாம் ஒன்றுபடாததே காரணம். ஆனால், இனி இவையெல்லாம் ‘நாம் தமிழர்’ இயக்கத்தால் இனி நடந்தேறும். ‘நாம் தமிழர் இயக்கம்’ தமிழர்களை ஒன்று படுத்தும் இயக்கம். இந்திய தேசியமும், திராவிடமும், தமிழர்களின் இன உணர்வை, மான உணர்வை வீழ்த்தியதின் பின்னர், உதித்தது தான் ‘நாம் தமிழர்’ எனும் தமிழ் தேசிய இயக்கம்.
தந்தை பெரியாரின் திராவிடத்தை கைவிடுவது சரியா?
தந்தை பெரியாரின் திராவிடம் என்பதே தவறு. தந்தை பெரியாரே முதலில் கழகத்தை தோற்றுவித்த போது, தமிழர் கழகம் என்று தான் பெயரிட்டார். அப்போதுள்ள சூழலில் தமிழர் இயக்கம் என்றால், ஆரியர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பதால், திராவிடர் கழகம் என தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. தமிழர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் யாரும் குரல் கொடுக்கவில்லை என்றால், நாங்கள் ஏன் குரல் கொடுக்க வேண்டும். எனவே, திராவிடம் இப்போதைய சூழலுக்கு பலன் தராது.
அப்படியென்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள்?
பெரியாரின் கொள்கைகள் இல்லாமல் எங்களால் உயிர் வாழ முடியாது. பெரியாரை கைவிட்டு எங்களால் இருக்க முடியாது. நாங்கள் பெரியாரின் பேரன்கள். தனது 95வது வயதில், மூத்திர பையுடன் சுற்றித்திரிந்தவர் பெரியார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’ எனக்கூறிய பெரியார் ஊற்றிய இன உணர்வும், மான உணர்வும் எங்களிடம் உள்ளது. பெரியாரையோ, பெரியார் கொள்கைகளையோ கைவிட்டு விடுவேன் என யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் பெரியாரின் பேரன்கள்.
தமிழர் தேசிய இயக்கம் துவங்கியுள்ளதால், இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் எதிராக சித்தரிக்கப்பட்டுள்ளீரே?
யாரை சொல்கிறீர்கள் என்னையா? தமிழ் தேசிய இயக்கம் துவங்கினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க முடியாதா? இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவேனா. யார் சொல்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினர் மக்களுக்கு பாடுபடுவது தான் எங்கள் நோக்கம்.
பிரபாகரன்?
தந்தை பெரியாரின் கனவுகளை, நனவாக்கி காட்டியவர் பிரபாகரன். ஜாதி ஒழிய வேண்டும் என்றார் பெரியார். ஈழத்தில் அதனை செய்து காட்டினார் பிரபாகரன். ஈழத்தில் ஜாதி இல்லை. பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என வலியுறுத்தினார் பெரியார். அதனை நடத்தி காட்டி, பெண்களுக்கு சமஉரிமை வழங்கினார் பிரபாகரன். இப்படி பெரியாரின் கனவுகளை நனவாக்கியவர் பிரபாகரன். ‘அடிமையாக வாழ்வதை விட சுதந்திரமாக வாழ்வதே சரி’ என 22 பேருடன் சண்டையை துவக்கியவர் எங்கள் தலைவர். அவரை நான் நேரில் சந்தித்த தருணங்கள் சிலிர்ப்பானவை. அவரை மீண்டும் காண்பேன் என்பது மட்டும் உறுதி.
காங்கிரஸ் எதிர்ப்பு ஏன்?
நான் காங்கிரஸ். எனது சகோதரர் காங்கிரஸ். எனது குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தேச விடுதலைக்கு போராடிய கட்சி என காங்கிரசை கொண்டாடி வந்தோம். கை சின்னத்தை கொண்டாடினோம். ஆனால் அதே கை சிங்களனுக்கு துணை போய், எங்கள் சகோதர்களான ஈழத்தமிழர்களை கொன்று சாய்த்ததே அதன் பின்னர் எப்படி அவர்களை ஆதரிப்பது. ‘சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரசை கலைத்து விடுங்கள்’ என மகாத்மா காந்தியிடம் கேட்டார் தந்தை பெரியார். ஆனால் பெரியாரின் கொள்கைகள் ஏற்கப்படவில்லை. அவ்வாறு பெரியாரின் கொள்கை ஏற்கப்பட்டிருந்தால், இந்தியா எப்போதே வல்லரசாகியிருக்கும். சிங்களனுக்கு துணை போய், தமிழனை கொன்ற காங்கிரசை எதிர்க்காமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்.
தமிழக அரசின் செயல்பாடு?
ரூ.1க்கு அரிசி என்பதை சாதனையாக கூறி வருகிறது தமிழக அரசு. ரூ.1க்கு அரிசி வாங்கும் அவலநிலைக்கு தள்ளியிருப்பது சாதனையா? வேதனையா?. இந்த தேசத்தை நாசமாக்கிய சொல் இலவசம். ‘இலவசம் வேண்டாம் என எப்போது மக்கள் சொல்கிறார்களோ. அப்போது தான் நாடு வளர்ச்சி பெற்றதாக பொருள். இங்கும் எதுவும் இலவசம். தமிழர்களின் உயிரும் கூட. அரிசி, பருப்பு, ஆடு, கோழி இறைச்சி என அனைத்தையும் விட மலிவாக கிடைக்கிறது தமிழக மக்களின் உயிர். பெரியாரின் வழி வந்தவர்கள், அவரை மறந்து விட்டார்கள் என்பது மட்டும் உண்மை.
தமிழ் மொழி பயன்பாடு?
நானும் ஆங்கில மொழியை கலந்து பேசியவன் தான். ‘என் தாய் மொழியை நான் பேசாமல் எந்த நாய் பேசும்’ என எனக்குள் நான் கேட்டுக்கொண்ட கேள்விதான் என்னை தமிழ் மொழியில் பேச வைத்தது. தமிழகத்தில் நாம் பேசுவதில் பாதி சமஸ்கிருதம். பாதி ஆங்கிலம். தமிழ் பெயர் யாருக்கும் வைப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் ஓடுகின்ற ஓட்டத்தில் மாற்றி விடலாம். தமிழில் பேசினால் மதிப்பதில்லை என்கிறார். மதிக்காதவனை மிதியுங்கள். தமிழை உயிருக்கு இணையாக மதியுங்கள். நாக்கை திருத்த முடியாத தமிழன் நாட்டை எப்படி திருத்த முடியும். ஆங்கிலம் பேசுங்கள் தவறில்லை. வெளிநாட்டினரிடம் நீ தமிழில் பேசினால் முட்டாள். ஆனால் உன் உறவுகளிடம் நீ ஆங்கிலத்தில் பேசினால் மகா முட்டாள். ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும், தமிழை தமிழாகவும் கலப்பின்றி பேசுங்கள். இனி எப்போதும் தமிழிலேயே பேசுவோம் என முடிவெடுப்போம்.
நாம் தமிழர் இயக்கத்தின் அடுத்த கட்டம்?
அரசியல். கட்சியாக மாறி, அரசியலை வென்றெடுப்பது தான். பிறருக்கு வாக்களித்து, வாக்களித்து ஓய்ந்தது போதும். உனக்கு நீயே வாக்களித்துக்கொள்ளும் நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும். இன்னும் ‘நாம் தமிழர் இயக்கம்’ சாதிக்க உள்ளது எண்ணிலடங்காது. காத்திருந்து பார்த்துக்கொண்டே இருங்கள் நாம் தமிழர் இயக்கத்தின் வளர்ச்சியை.

September 18, 2009

உன்னைப்போல் ஒருவன் (திரை விமர்சனம்)

‘எனக்கு பின்னால் வருபவர்கள் என்னைப்போல் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்’ தந்தை பெரியாரின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது ‘உன்னைப்போல் ஒருவன்’. தீவிரவாதத்தை எதிர்க்க தீவிரவாதமே தீர்வு என பொட்டில் அறைந்து கதை சொல்கிறது படம்.
தீவிரவாதத்துக்கு எதிராக கிளம்பும் சாமானியன் தான் கதையின் நாயகன். அரசு பேருந்து, வணிக வளாகம், ரயில், காவல் நிலையம் என அடுத்தடுத்து பல இடங்களில் பேக் ஒன்றை வைத்து விட்டு, கட்டுமான பணி நடந்து கொண்டுள்ள கட்டடத்தின் மேலே செல்கிறார் கதையின் நாயகன். லேப்டாப், செல்போன் என அதிநவீன சாதனங்களுடன், சென்னை மாநகர காவல்துறை ஆணையரை தொடர்பு கொள்ளும் நாயகன், மாநகரில் 5 இடங்களில் சக்தி மிக்க வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டுகிறார். வெடிக்காமல் இருக்க வேண்டுமானால், குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கிறார். வேறு வழியின்றி காவல்துறையால் விடுவிக்கப்படும் தீவிரவாதிகளை சாதூர்யமாக கொல்கிறார் நாயகன்.
கதையின் நாயகனாக கமலஹாசன். காட்சிக்கு காட்சி மிக சிறந்த நடிப்பால் ஈர்க்கிறார். புகார் அளிக்க செல்லுமிடத்தில் காவல் அதிகாரியிடம் பேசும் போதும், பெண் கருவறுக்கப்பட்ட காட்சியை போனில் விவரிக்கும் போதும், நீ எந்த மதத்தை சேர்ந்தவன் என கேட்கும் போது கோபப்படும் இடத்திலும் என காட்சிக்கு காட்சி பன்முக நடிப்பால் கவர்கிறார் கமலஹாசன்.
இவருக்கு இணையாக நடித்துள்ளார் மோகன்லால். மாநகர காவல்துறை ஆணையாளராக வரும் மோகன்லால். கமலஹாசனுடனான் உரையாடலின் போதும், தலைமை செயலாளர் லட்சுமியுடன் இது தொடர்பாக விவாதிக்கும் போதும் என படம் முழுவதும் நிஜ காவல்துறை அதிகாரியாக கண்முன் நிற்கிறார்.
படத்துக்கு மிகப்பெரிய பலம் வசனங்கள். படம் துவங்கி 10 நிமிடங்களுக்கு பிறகு வரும் ‘உன் மேல என்ன கோபம். கோபப்பட மொத்த நாடே இருக்கு’ என்ற வசனத்தில் துவங்குகிறது படத்தின் விறுவிறுப்பு. தொடர்ந்து படம் முழுவதும் வசனங்களின் ஆக்கிரமிப்பு தான். ஒவ்வொரு வசனங்களும், மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
‘அதென்ன நான் இந்துவோ, முஸ்லீமாவோ தான் இருக்கணுமா, கிறிஸ்துவனா, கம்யூனிஸ்டா, நாத்திகனா இருக்க கூடாதா’ என்பதில் துவங்கி அடுத்தடுத்து வரும் வசனங்கள் மத வெறியை கடுமையாக சாடுகிறது.
‘சொல்றதை தமிழ்ல சொல்லு, முதல்வர் டி.வி. பாத்துட்டு இருக்கார்’ என பேட்டி கொடுக்கும் அதிகாரியிடம் கமிஷனர் சொல்வது; ‘கீழே விழுந்துடுச்சுன்னு விட முடியலை. விலைவாசி ஏறிடுச்சுல்ல’ என கீழே கிடந்த தக்காளியை எடுக்கும் கதைநாயகன், ‘நாங்க கஷ்டப்பட்டு புடிச்சுட்டு வருவோம், தீவிரவாதியோ, அரசியல்வாதியோ ஒரு போன்ல விடுவிச்சுருவீங்க’ என கொந்தளிக்கும் கமிஷனர் என படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் நடைமுறையை அம்பலமாக்குகிறது.
படத்தின் முக்கிய காட்சி. தீவிரவாதிகளை கொல்வது ஏன் கமல் விவரிக்கும் காட்சிகள். கண்களை நீர் வழிய, பெண் ஒருவர் கருவழிக்கப்பட்ட காட்சியை விவரித்து விட்டு, கண்ணில் வழியும் கண்ணீரை துப்பாக்கியால் துடைக்கும் காட்சி படத்தின் மொத்த கதையையும் சொல்லி விடுகிறது. ‘தீவிரவாதத்தை அழிக்க தீவிரவாதம் தான் வழி’ என அடுத்து வரும் வசனம் அந்த காட்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது.
படத்தின் இசை, காவல்துறை அதிகாரிகளின் நடிப்பு அனைத்திலும் குறையேதும் இல்லை. உலக சினிமாக்களுக்கான தரத்தில் அமைந்துள்ள ‘உன்னைப்போல் ஒருவன்’ தமிழ் சினிமாவின் மைல் கல்.