January 2, 2012

வெட்கமாக இல்லையா? : காசி ஆனந்தன்

ஆங்கிலமும் தமிழும் கலந்த இந்த வகைப் பாடல்களை இங்கே சாடுகிறார் கவிஞர் காசி ஆனந்தன். இப்படியே போனால் இன்னும் ஒரு நூறாண்டில் தமிழ் அழியும் என்கிறார். ஒரு மொழி அழிந்தால் போதும் அந்தத் தேசிய இனமும் அழிந்துவிடும். ஓர் இனத்தின் உயிர்நாடியே தாய்மொழிதான். ஓர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் தாய்மொழியை அழித்துவிடு என்று சொல்வார்கள். மொழி என்பது ஒரு கருவி மட்டும்தான் என¢ற கருத்து இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. அதுவல்ல. மனிதர்களின் உயிரோடும் உணர்வோடும் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிற உயிர்மூச்சு. மொழி ஒரு தொடர்பு கொள்ளும் கருவி என்பதைப்போல தாய் என்பவள் பிள்ளை பெற்றுத்தருகிற கருவி என்று சொல்லமுடியுமா? அதுவல்ல தாய். அதையும் தாண்டி மேலானவள். அப்படித்தான் தாய்மொழியும். ஆனால் மெல்ல தமிழ் மொழி அழிந்து மிகப்பெரிய அளவில் சுருங்கி தேய்ந்துகொண்டிருப்பது உண¢மை. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழ் மொழி இருந்தது என சட்டமேதை அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்றைய நிலைமை கவலைக்கிடமானது. கீழை ஆரிய மொழியான சமஸ்கிருதம் கலந்து தமிழை அழித்ததைப்போல, மேலை ஆரிய மொழியான ஆங்கிலம் கலந்து தமிழ் சிதைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 600 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மொழி மலையாளம். சேர நாடாக இருந்தது. சேரன் செங்குட்டுவன் கல் சுமந்து கண்ணகி கோயில் கட்டினான். சிலப்பதிகாரம் குறிப்பிடும் வளம் நிறைந்த நாடு. தமிழ்தான் சமஸ்கிருதம் கலந்து மலையாளமாக மாறிப்போனது. இதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாமா? ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிற மொழி கலந்தால் கண்டிப்பாக தமிழ் அழியும். தஜுகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கவிஞன் ரசூல் கம்ஸதோவ் பேசிய மொழி அவார். அதுதான் அவனுடைய தாய்மொழி. "நாளை என்னுடைய தாய்மொழி இறக்குமானால், நான் இன¢றே இறந்துவிட விரும்புகிறேன்" என்று சொன்னான். தன் தாய்மொழியை எந்த அளவுக்கு அவன் மதிக்கிறான் என்பதற்கு இதைவிட வேறொரு கருத்தைச் சொல்லமுடியாது. நாம் அதை நினைத்துப்பார்க்க வேண்டும். நமக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஆங்கிலக் கலப்பு அதிகரித்துக் கொண்டே போனால், மிகக் குறுகிய காலத்திலேயே தமிங்கிலர் என்ற புதிய தேசிய இனமாக நாம் மாறிவிடுவோம். புதிய மொழியும் புதிய இனமும் உலகில் அறிமுகமாகும். நூறு ஆண¢டுகளுக்குள் இந்த மாற்றம் நடந்துவிடும். தமிழின் வயது இன்றைக்கு 50 ஆயிரம் ஆண்டுகள் என்று பாவாணர் சொல்லியிருக்கிறார். இக்கருத்தை மொழியியல் அறிஞர் லெவிட் ஒப்புக்கொள்கிறார். 50 ஆயிரம் ஆண்டுகளாக காப்பாற்றி வந்த ஒரு மொழியை இழந்துகொண்டிருக் கிறோம் என்று நினைத்துப்பாருங்கள். உங்களுக்குக் கவலையாக இல்லையா? தொன¢மையான ஒரு மொழியை இழக்கலாமா? உலகம் முழுவதும் இன்றும் பழம்பொருளை பத்திரமாகப் பாதுகாக்கும் பழக்கம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் மிக அழகான ஒரு பேனாவைக்கூட பாதுகாத்து நினைவாக வைத்திருக்கிறோம். அந்த உணர்வு மொழியைப் பாதுகாப்பதில் உனக்கு இருக்கவேண்டும். ஆங்கில மொழி லத்தீன், பிரெஞ்சு, கிரேக்க வார்த்தைகளைக் கொண்டுதானே உருவாகியிருக்கிறது. அப்படி ஏன் பிற மொழி வார்த்தைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை? என்று கேட்கிறார்கள். அது சொற்கள் தட்டுப்பாடுள்ள மொழி. பிற மொழிகளை ஏற்றுக்கொண்டால் அம்மொழிக்கு வரவு. ஆனால் தமிழில் ஒவ்வொரு புதுச்சொல் நுழையும்போதும் நம்மிடம் இருக்கிற ஒரு பழஞ்சொல் வழக்கொழிந்துவிடும். இது நமக்கு இழப்பு. அவனுக்கு வரவு. ப்ளவர் என்கிற சொல்லை நாம் ஏற்றுக் கொண்டால் மலர், பூ என்கிற சொற்கள் காணாமல் போய்விடும். அது மொழியின் அழிவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிற மொழி அறிவியல் சொற்களுக்கு இணையாக மொழியாக் கம் செய்கிற அளவுக்கு தமிழில் சொற்கள் இருக்கின்றன. சில புதிய சொற்களையும் உருவாக்கமுடியும். சிலர் வெட்கங்கெட்ட முறையில் ஆங்கிலச் சொற்கள் கலப்பைத் தவிர்க்கமுடியாது. தமிழில் பேசுவது இயல்பாக இல்லை என்று சொல்கிறார் கள். தமிழில் பேசுவது உனக்கு வெட்கமாக இருக்கிறதா? ஆங்கிலத்தை முழுமையாகப் பேசு. ஆங்கிலமும் வளரும். தமிழும் வளரும். வெளிநாட்டுக் குப் போனால் என்ன செய்வது? என்று கேட்கிறார்கள். இதுவரையில் ஈழத்திலிருந்து 17 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மொழிகளிலும் பேசுகிறார்கள். அங்கே போன பிறகுதான் கற்றுக் கொண்டார்கள். தமிழ்நாட்டுக்கு மார்வாடிகள் வருகிறார்கள். அவர்கள் ராஜஸ்தானில் தமிழைக் கற்றுக் கொண்டுதான் இங்கு வருகிறார்களா? இங்கேயே ஆங்கிலேயனாக மாறி வாழத் தொடங்கிவிட்டோம். இன்றைய நிலையில் தமிழுடன் 50 சதவிகிதம் ஆங்கில வார்த்தைகள் கலந்துவிட்டன. அன்றாடப் பேச்சில் நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கிலம் கலந்தே பேசுகின்றனர். கிட்டத்தட்ட மொழி மாறிக்கொண்டிருக்கிறோம். தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. இனமும் மாறிக்கொண்டிருக்கிறோம். திரைப்படத் துறையில் ஆங்கிலக் கலப்பு என்பது மிக எளிதாக நடந்துவருகிறது. ஆங்கிலப் படங்களில் எங்காவது பிரெஞ்சு மொழியில் பேசுகிறார்களா. நீ ஏன் செய்கிறாய்? அவனது தாய்மொழிமீது விழிப்புடன் இருக்கிறான். இங்கிலாந்தில் மொழிக் கலப்பு தொடர்பான எதிர்ப்பு இயக்கத்துக்கு இளவரசர் சார்லஸ் தலைவராக இருக்கிறார். இயல், இசை, நாடகம் என்று சொல்லிவருகிறோம். இயலான பாடல்களில் ஆங்கிலத்தை அள்ளித் தெளிக்கிறோம். இசையில் பாப், ராக் என்று கலந்துவிட்டோம். ஒய் திஸ் கொலவெறிடி? என்று எழுதுகிறவனைப் பார்த்து தமிழ்மீது உனக்கு ஏன் இந்தக் கொலைவெறி என்று கேட்கவேண்டும். நீ எளிதாகப் பாடி விடுகிறாய். ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடுமா என்று கிண்டலாகக் கேட்கிறாய். இந்த நொடியில் அழியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் அழியும். அதற்கு இதுதான் தொடக்கமாக இருக்கும். இதுபோன்ற பாடல்களுக்கு எதிரான இயக்கமே தொடங்கப் படவேண்டும். தமிழும் தெரியும். தெலுங்கும் தெரியும். ஆனால் தமிழ், தெலுங்கு மொழியாக மாறிய காலம் தெரியுமா? குரங்கு தெரியும். மனிதன் தெரியும். குரங்கு மனிதனாக மாறிய படிநிலை தெரியுமா? அதுபோல தமிழும் மாறும். அது நமக்குத் தெரியாமல் போய்விடும். இன்று 'ஒய் திஸ் கொலவெறிடி' என்று பாடி விடுகிறாய். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எல்லாம் முடிந்துபோய்விடும். உன்னுடைய மொழி புதிய மொழியாக மாறியிருக்கும். எல்லீஸ் டங்கன் என்ற ஆங்கிலேயன் தமிழில் படமெடுத்த காலத்தில் தமிழ் செழித்திருந்தது. நல்ல தமிழில் தலைப்புகளை வைத்தார்கள். இந்த மானங்கெட்ட தமிழன் படமெடுக்கும் போது தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. நீ தமிழனாக இருந்துகொண்டு இப்படி செய்வதில் உனக்கு கொஞ்சங்கூட வெட்கமாக இல்லையா? மிக அண்மையில் சீனாவில், தொலைக்காட்சியில் வானொலியில், திரைப்படங்களில் ஆங்கிலத்தைக் கலந்தால் தண்டனை உண்டு என்று அறிவித்துள்ளார்கள்.ஈரான் அதிபர் அகமதிநிஜாத்கூட சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறார். உலகமயமாக் கலின் விளைவாக ஆங்கிலம் வேகமாகக் கலந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கில மொழி கலப்புக்கு எதிரான இயக்கங்கள் தோன்றி வருகின்றன. அந்தவகையில் ஒய் திஸ் கொலைவெறிடி... போன்ற மொழிக் கலப்புப் பாடல்களை எழுதுகிறவர் களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். நன்றி : த சண்டே இந்தியன்.