February 19, 2009

திசை மாற்றப்படும் இலங்கை பிரச்னை?

இலங்கை தமிழர் பிரச்னைக்காக போராடி வரும் சமூகத்தினரில், மாணவர்களுக்கு அடுத்தபடியாக தீவிரமாக இருந்து வருவது வக்கீல்கள். இந்த தீவிரம் தான் சுப்பிரமணியசுவாமி மீது தாக்குதலை ஏற்படுத்தவும் வித்திட்டது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க கல்லூரிகளையும், விடுதிகளையும் மூடிய தமிழக அரசு, வக்கீல்கள் போராட்டத்தை என்ன செய்வது என தெரியாமல் விழித்து வந்தது. இந்த நிலையில் தான் சுப்பிரமணியசுவாமி மீதான தாக்குதல் அரங்கேறியது. இந்நிலையில், இலங்கை தமிழர் ஆதரவு நிலையில் இருந்த வக்கீல்கள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தி, வக்கீல்களை அரசுக்கு எதிரானவர்களாகவும், காவல்துறைக்கு எதிரானவர்களாகவும் காட்டியுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் வக்கீல்கள் இலங்கை பிரச்னைக்கு ஆதரவு என்ற செய்தி வெளிவராது. இலங்கை பிரச்னை மறந்து, காவல்துறையை கண்டித்தும், அரசை கண்டித்தும் பிரசாரங்களை நடத்த கூடும் என அரசு நினைத்திருக்க கூடும். குறிப்பிடும்படி, இலங்கை தமிழர் பிரச்னையில் குரல் எழுப்பிய வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் தொலைக்காட்சி, தமிழோசை போன்ற இலங்கை தமிழர் ஆதரவு ஊடகங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தாக்கப்பட்டுள்ளனர். சுப்பிரமணியசுவாமி நீதிமன்றத்தில் ஆஜரானதும், வக்கீல்கள் நீதிமன்றத்தில் தாக்கப்பட்டதற்கும் என்ன தொடர்பு, சுப்பிரமணியசுவாமியை இரு தினங்களுக்கு முன்னர் தாக்கியதற்கா இந்த தடியடி போராட்டம். நீதிமன்ற வளாகத்தில் போலீசார் எழுப்பியுள்ள இந்த தடியடி சம்பவம், இலங்கை தமிழர் பிரச்னையை திசை திருப்பத்தானா? இனத்தை அழிக்கும் கும்பலுக்கு இணங்கி போகும் அரசிடம் இதை விட வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

No comments: