March 9, 2009

நாஞ்சில் சம்பத் மீது தே.பா. சட்டம்

நாட்டின் பாதுகாப்புக்கான சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டத்தை, ஆட்சி பாதுகாப்பு சட்டமாக மாற்றியுள்ளது தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும்.
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், யாருடைய பிரசாரம் கட்சிக்கு பாதகமாக அமையும் என நினைக்கிறார்களோ, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்கிறது தி.மு.க. சீமான், கொளத்தூர் மணி என நீளும் இந்த பட்டியலில் அடுத்து இடம்பெறுகிறார் நாஞ்சில் சம்பத்.
பிரசாரத்தில் தி.மு.க. காங்கிரஸ் எதிர்ப்பை அனலாய் கக்குபவர்களில் முக்கிய இடம் பிடிப்பவர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க.வின் பிரசார பீரங்கி இவர் தான். இவரின் பிரசாரம் கண்டிப்பாக தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும். இதனை உளவுத்துறை அரசுக்கு தெரிவிக்க திருப்பூரில் ஒரு வாரத்துக்கு முன்னதாக நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவரை கைது செய்துள்ளது போலீஸ்.
இதன் தொடர்ச்சியாக இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவுகிறது போலீஸ். அதன்படி, தமிழகம் முழுவதும் இதுவரை நாஞ்சில் சம்பத் மீது பதிவாகியுள்ள வழக்குகளை திருப்பூர் போலீசார் சேகரித்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்த முழுவிவரங்களை சேகரித்துள்ள திருப்பூர் போலீசார், நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதி கோரியுள்ளனர். இன்று (மார்ச் 10) அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார் என உறுதியாக கூறுகின்றன போலீஸ் வட்டாரங்கள்.
சீமான், கொளத்தூர் மணி இப்போது நாஞ்சில் சம்பத் என நீளும் இந்த பட்டியலில் அடுத்து யாராக இருக்கும். வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன், இயக்குனர் மணிவண்ணன் . . . ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம். போலீசாருக்கு ஒரே ஒரு கோரிக்கை, தேசிய பாதுகாப்பு சட்டம் அப்படியே இருந்து விட்டு போகட்டும். தயது செய்து பேரை மட்டும் மாற்றுங்கள், ‘ஆட்சி பாதுகாப்பு சட்டம்’ என்று. . .

No comments: