March 30, 2010

நளினியும், காங்கிரஸ் கூட்டணியும்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 19 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினியை விடுவிக்க முடியாது எனக்கூறி, தனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள நெருக்கத்தை (?!) அதிகரித்துக்கொண்டுள்ளது தி.மு.க. அரசு. தி.மு.க.விடமும், அதன் தலைவர் கருணாநிதியிடமும் இருந்து இதைதான் எதிர்பார்க்க முடியும் என்ற போதும், ஏனோ ஏராளமான சங்கடங்களுடன் இதை எதிர்கொள்ள வேண்டியதாய் உள்ளது.
தி.மு.க., காங்கிரசிடைய பிளவு ஏற்படுவதாகவும், அ.தி.மு.க. உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட, அதனை மறுக்க காங்கிரசுக்கு பல வகையில் முக்கியத்துவம் அளிக்கும் தி.மு.க. அரசின் அடுத்த முயற்சி தான் இது. மனித உரிமையின் அடிப்படையில் நளினியை விடுவித்தால், காங்கிரஸ் கட்சியினருக்கு அது பொறுக்காது. ‘‘இலங்கையில் தமிழினமே அழிந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்கள் (!?) தலைவரை அழித்த நளினியை மட்டும் விடுவிக்க கூடாது,’’ என சூளுரைத்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை குளிர்விக்கும் வகையில் தன் கடமையை செவ்வனே செய்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெறாமல் போன தி.மு.க.வினர் ஏராளமானோர். அவர்களுக்கு குறைந்த பட்சம் மேல்முறையீடு கூட செய்யாத தமிழக அரசு, நளினி 19 ஆண்டுகளை சிறையில் கழித்தும் அவரை விடுவிக்காமல் உள்ளது எந்த வகையில் நியாயம். ஒரு கொலை வழக்கில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றது அதிகம் இல்லையா?. கடந்த 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி நளினி கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகளாகியும் தன்னை விடுவிக்காததால் கடந்த 2007ம் ஆண்டு முதன்முதலில் தன்னை விடுவிக்க கோரி நளினி மனுத்தாக்கல் செய்தார். அவரின் கோரிக்கைக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் ‘முடியாது’ என பதில் அளித்துள்ளது தி.மு.க. அரசு. இதற்கிடையில் 2008ம் ஆண்டு நளினியை ரகசியமாக சந்தித்து வந்தார் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தியின் இந்த சந்திப்பால், அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பும் பொய்த்து போனது. தன் கணவர் (?!) சாவுக்காக, தமிழினத்தை கொன்று குவித்த சோனியாகாந்தியிடமும், அதற்கு துணை போன தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் இனியும் எதிர்பார்க்க என்ன இருக்கிறது. சோனியாகாந்தி தன் கனவில் என்ன நினைத்தாலும் அதை நிறைவேற்றி வரும் கருணாநிதியிடம் ஒரே ஒரு கேள்வி ஆயுள் தண்டனை பெற்ற நளினியை 19 ஆண்டுகளுக்கு பின்னரும் விடுவிக்க மறுக்கும் நீங்கள், மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு, 3 ஊழியர்கள் கொல்லப்பட்டார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தி.மு.க.வை சேர்ந்த தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய மறுத்ததற்கு என்ன காரணம்? இந்த கேள்விக்கு பதில் உள்ளதா உங்களிடம். ராஜீவை நளினி கொலை செய்தார் என்பது உண்மையாகவே இருக்கட்டும். அதற்கு 19 ஆண்டுகள் சிறை என்பது மிக அதிகம் என்பதை யாராலும் உணர்ந்து கொள்ள முடியவில்லையா.

4 comments:

Jerry Eshananda said...

இதற்கு பெயர்தான் "அரசபயங்கரவாதம்".

Anonymous said...

ஜெரி ஈசானந்தன். said...

இதற்கு பெயர்தான் "அரசபயங்கரவாதம்".

மதுரை சரவணன் said...

எது எப்படியோ தி.மு.க. அரச தந்திரம் நமக்கு புலப்பட மாட்டீங்கிது. நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Anonymous said...

1. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். அது லீலாவதியாக இருந்தால் என்ன? ராஜிவ்வாக இருந்தால் என்ன?
2. காந்திக் கொலை வழக்கில் கோட்சேவின் சகோதரரின் ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.விடுதலையான அவர் காந்தியைக் கொன்றதற்காக வருந்தவில்லை என்று பேட்டி கொடுத்தார்.
3. விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றவர்கள், அதன்பின்பு நீதிமன்றம் உத்தரவுக்குப்பின் விடுதலை செய்ய முடியாது என்று அறிக்கை விட்டனர்.

4. ராஜிவ் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல, பழிவாங்கும் செயல் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ராஜிவ் கொலை செய்யப் போகிறார் என்று ஸ்ரீ பெரும்புதூர் செல்லும் வரை நளினிக்குத் தெரியாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மூன்று நீதிபதிகளில் ஒருவர் கூறியிருக்கிறார்.