March 18, 2009

ஒரு எம்.பி. தொகுதிக்கு கொள்கையை அடமானம் வைத்த திருமா

‘‘சிங்கள அரசுக்கு எதிரான அறப்போராட்டத்தை வலுவிழக்க செய்யும் தமிழக அரசின் முயற்சி வேதனையை அளிக்கிறது. ஆதாரிக்காவிட்டாலும் தமிழக அரசு எதிர்த்திருக்க கூடாது’’
இது இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி நடந்த போராட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பகுதி. இது மட்டுமன்றி, இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தொடர்ந்து கண்டன குரல்களை பதிவு செய்து வந்தவர் தொல்.திருமாவளவன். ஆனால், இப்போது நிலை தலைகீழ். இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பான போராட்டங்களில் அண்மைகாலமாக தொல்.திருமாவளவன் பங்கேற்கவில்லை. அது தொடர்பான அறிக்கைகளும், பேச்சுகளும் இல்லை. அதேசூழலில் தான் பகிரங்கமாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
இலங்கை தமிழர், விடுதலை புலிகள் ஆதரவு நிலைக்காக விடுதலை சிறுத்தைகளுடன் காங்கிரஸ் கட்சி, கூட்டு வைக்க கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தலைமைக்கு பகிரங்கமாக வேண்டுகோள்
விடுத்தனர். இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தெரியும்.
‘ஒட்டுமொத்த தமிழர்களை காங்கிரஸ் ஆட்சி இழிவு படுத்துகிறது. தமிழர்கள் ஒரு போதும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை மன்னிக்கமாட்டார்கள்’ என கடுமையாக விமர்சித்தார் தொல்.திருமாவளவன். இது காங்கிரசாருக்கும் தெரியும். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் கூட்டணி கரம் கோர்த்துள்ளது இவ்விரு கட்சிகளும். இப்போது காங்கிரஸ் கட்சி பற்றிய விமர்சனத்தை தொல்.திருமாவளவனும், விடுதலைசிறுத்தைகள் கட்சி குறித்த கண்டனங்களை தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தெரிவிப்பதில்லை.
இன்றும் ஆயிரமாயிரம் தமிழர்கள் இலங்கையில் செத்துக்கொண்டிருக்க கூட்டணி இட ஒதுக்கீட்டை துவங்கியுள்ளது தி.மு.க. கூட்டணி கட்சிகள். அநேகமாக காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தில் போட்டியிடக்கூடும். ஆனால், இந்த ஒரு மக்களவை தொகுதியின் மூலம் கட்சியின் கொள்கைகளை இவர் முன்னிறுத்த முடியாது. ஏனெனில் கட்சியின் கொள்கைகளை அடமானம் வைத்து தான் இந்த மக்களவை தொகுதியே பெறப்பட்டுள்ளது.
அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என நீளும் கட்சியின் முழக்கங்கள். அனேகமாக இனி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பயன்படாது. மக்களவை தேர்தலில் பெறப்பட உள்ள ஒரு சீட்டுக்காக கொள்கைகளுடன் இந்த வாசகங்களையும் அடகு வைத்து விடுங்கள்.
விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம், போராட்டங்களின் போது இளிச்சவாயர்கள் நாங்கள் அல்ல என கோஷம் இடம்பெறும். உண்மை தான் உங்களை நம்பிய தமிழர்களும், இலங்கை தமிழர்களும் தான் இளிச்சவாயர்கள்.

2 comments:

Rajaraman said...

திருமாவளவன் போன்ற அரசியல் வியாபாரிகளுக்கு கொள்கை ஒன்று உண்டு என்றுநம்பும் உங்கள் அறியாமையை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா!

மற்றவர்கள் எப்படியோ. ஆனால் தன் இன இளைஞர்களின் உழைப்பை திருடி வயறு வளர்த்து சொகுசாக வாழ்க்கை நடத்தும் ஒரு குள்ள நரி திருமாவளவன்.

Unknown said...

இன்னமும் இந்திய மயக்கத்திலிருக்கும் தமிழர்கள் இனியாவது அதிலிருந்து விடுபட வேண்டும். இது ஈழப் போராட்டம் நமக்களித்த கொடையாக இருக்கட்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது... இந்தியாவும் இப்படித்தான்... பிடுங்க வேண்டும்… நாம் பிடுங்குவோம்.