April 19, 2008

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

‘ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வந்த பெண் மயக்கமானார்’ கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவையில் நடந்தது இந்த சம்பவம். அதிகாரிகளின் அலைக்கழிப்பே இதற்கு காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார் அந்த பெண். அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காத (அரசு) அதிகாரிகள், சம்பவம் நடந்த அடுத்த நாள், அவரது கோரிக்கையை அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டனர்.

காயம்பட்ட குழந்தை, ஆறுதல் கூறும் அம்மாவின் கால்களை கட்டி, பீறிட்டு அழுவது போல, செய்தியாளர்களிடம் கண்ணீர் கொப்பளிக்க பேசினார் அந்த பெண். ஆனால், தி.மு.க. உட்கட்சித் தேர்தல்; காங்கிரஸ் கோஷ்டி பூசல் விவகாரம் ஆகியவையே முக்கிய செய்திகள் என செய்தியாளர்களும், மக்களும் நினைத்ததால், அந்த செய்தி முக்கியத்துவத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்த தவறியது.

அரசு அலுவலகங்களில் மக்கள் அவமானப்படுத்துவதும், அலைக்கழிக்கப்படுவதும் என்ன புதிதா? இது நாள்தோறும் நடப்பது தானே? இதில் என்ன பரபரப்பு வேண்டிக்கிடக்கிறது என மக்கள் நினைத்திருக்கலாம். அந்த அளவுக்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் சர்வசாதாரணமாக நிகழ்கிறது இது போன்ற சம்பவங்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த அதே வாரத்தில், ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தினர் அரசு ஊழியர்கள். ஆறாவது ஊதியக்குழு ஜாக்பாட் அடித்தது போன்று ஊதியம் உயர்த்தப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அந்த பரிந்துரைகள் போதாது என போர்க்கொடி தூக்கியுள்ளனர் அரசு ஊழியர்கள்.

பெறுபவரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் தானம் வழங்குவது போல, அரசு ஊழியர்களிடம் வேலையை சரியாக பெறவும், அவர்களை பொறுப்புடன் செயல்படவும் வைக்காமல், அவர்களுக்கு ஊதியத்தையும், பிற படிகளையும் வாரி வழங்குகிறது. அரசு ஊழியர்களும் பிச்சை வாங்குவது போல, சம்பளம் பெறுவது ஒன்றே நோக்கம் என செயல்படுகின்றனர்.

பணி நேரத்தில் அரட்டை; கடமையை செய்யவும் லஞ்சம் என மனசாட்சியற்றவர்களின் கூடாரமா மாறி வருகிறது அரசு அலுவலகங்கள். ரூ.100 கொடுக்காமல் சாதி சான்றிதழ் எப்படி தருவார்கள் என மக்கள் (நியாயம்) பேசும் அளவுக்கு சர்வ சாதாரணமாகி விட்டது லஞ்சம் (ரசீது வழங்காததது ஒன்று தான் குறை). இதைப்பற்றியெல்லாம் அரசு ஊழியர்களுக்கு கவலை இருப்பதாக தெரியவில்லை. அரசு ஊழியர்களை பற்றி சமீபத்தில் பேசிய பெரும்பாலான கட்சிகள், அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளன. (தேர்தல் நேரத்தில் இவர்கள் தான் துணை என நினைத்தார்களோ என்னவோ?) மக்கள் காசில் வயிறு வளர்க்கும் அரசு ஊழியர்கள், மக்களுக்கு ஊதியம் வழங்கும் முதலாளிகள் வர்க்கத்தை போல நடந்து கொள்வது தான் இதில் உச்சகட்டம். மனிதாபிமானம் அற்று, ஐந்தறிவு ஜீவன்களை போல, வாழ்க்கை நடத்தி வரும் இவர்கள், பொதுமக்களை தங்களை விட சற்று குறைவான அறிவை கொண்ட ஜீவன்களாக மாற்றுவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது.

‘‘பாதகஞ் செய்பவரை கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா’’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல்களை படித்தவர்கள் நாங்கள். இந்த நிலை தொடர்ந்தால், உங்களை (அரசு ஊழியர்கள்) மோதித்தள்ளவும், முகத்தில் உமிழவும் வெகு நேரம் ஆகாது.

No comments: