November 20, 2008

இலங்கையும், தமிழீழமும், இந்தியாவும் . . .

"அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாகத் தொய்ந்து போயுள்ள சிறிலங்கா அரசிற்கு முண்டுகொடுக்கும் இந்திய அரசின் செயலானது, ஈழத் தமிழ் மக்களைக் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது" - என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் 10-02-2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசுக்குத் துணையாக, இந்தியா மேற்கொள்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையில் "இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப் படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழிப்பிற்கு, இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளை, "வரலாற்றுத் தவறு" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா, தமிழீழம், சிறிலங்கா குறித்த சில வரலாற்றுத் தகவல்களை முன்வைத்துச் சில கருத்துக்களைத் தர்க்கிப்பதானது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம். நாம் கடந்த பல ஆண்டு காலமாக இந்தக் கருத்துக்களை வலியுறுத்தி வந்துள்ள போதிலும், தற்போதைய காலகட்டத்தில் இவை குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய தேவையும் உள்ளது.
ஒரு நாட்டினது ஆட்சி, அரசியல் கட்சிகளிடையே கை மாறுகின்றபோது, பொதுவாக அந்த நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் பெரிதான மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பதே உண்மையாகும்! குறிப்பாக, அந்த நாடு ஒரு வல்லரசாக இருக்கும் பட்சத்தில், அந்த வல்லரசு நாட்டின், வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவது மிக அரிதான செயலாகவே இருக்கும்.
எனினும், அண்டை நாடான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளை நாம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாது கேந்திர, பொருளாதாரவியல் போன்றவற்றின் அடிப்படையிலும் கவனித்துச் சிந்திக்க வேண்டும். அந்த வகையில் சில முக்கிய கருத்துக்களைத் தரக்கிக்க விழைகின்றோம். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களின் அன்புக்குரிய மாமியார் திருமதி இந்திரா காந்தி அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில், தனது அரசின் ஊடாகத் தமிழ்ப் பேராளி இயக்கங்களுக்கு ஆதரவையும், இராணுவப் பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்கி வந்தார் என்பது வெளிப்படையான ஓர் இரகசியமாகும். அத்துடன் அன்றைய சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள் மீது மேற்கொண்ட அரச பயங்கரவாத இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்திரா காந்தி அறிக்கைகளை வெளியிட்டு வந்ததோடு, சிறிலங்கா அரசு மீது, அரசியல் அழுத்தங்களையும் பிரயோகித்து வந்தார்.
இந்தியாவின் அன்றைய பிரதமரான இந்திரா காந்தியின் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாகத் தமிழீழ மக்கள் அவர்மீது மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தார்கள். அப்படியென்றால், ஈழத் தமிழ் மக்கள் பிரச்சனையில், அன்று இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில், இந்தியா கொண்டிருந்த வெளிவிவகாரக் கொள்கைக்கும், பின்னாளில் இந்தியா கொண்டிருக்கின்ற வெளிவிவகாரக் கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளதே என்ற கேள்வி எழுவது இயல்பானதாகும். ஆனால், கூர்ந்து சிந்தித்துப் பார்த்தால், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படை நோக்கத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற உண்மை புலனாகும்.!
அன்றைய வேளையில், ஜே.ஆர், ஜெயவர்த்தனாவின் சிங்கள அரசு, தனது இந்திய எதிர்ப்புப் போக்கை வெளிப்படையாகக் கொண்டிருந்ததோடு மட்டும் அல்லாது பாகிஸ்தான், žனா, அமெரிக்கா போன்ற இந்திய நலன்களுக்கு எதிரான நாடுகளுடன் நெருங்கிய நட்புறவையும் கொண்டிருந்தது. பிராந்திய வல்லரசான இந்திரா காந்தியின் அரசோ, அன்று, ஓர் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் யூனியனுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டிருந்தது. தனது நலன்களுக்கு எதிரான நாடுகளுடன் சிறிலங்கா அரசு நட்புறவைக் கொண்டிருந்த காரணத்தால், அந்த நாடுகளின் தலையீடும், செல்வாக்கும் இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதானது, தன்னுடைய பிராந்திய நலனுக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்று அன்றைய இந்திய அரசு கருதியது. அந்த வேளையில் இலங்கை விவகாரத்தில், தன்னுடைய மூக்கை நுழைப்பதற்கு, இந்தியாவிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக, ஈழத்தமிழர் பிரச்சனை விளங்கியது. அதனை முழுமையாகப் பயன்படுத்தும் முயற்சியில் இந்திரா காந்தி இறங்கித் தமது பிராந்திய மேலாண்மையை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
"ஈழத் தமிழர் போராட்டமானது, ஜே.ஆர், ஜெயவர்தனாவின் அரசிற்கு ஒரு தீராத தலையிடியாக உருவாகுவதன் மூலம், ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு, இந்தியாவின் உதவியை நாடி வரவேண்டும்" என்றே இந்திரா காந்தி விரும்பினார். அதுவே உண்மையுமாகும். தவிரவும், திருமதி இந்திரா காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட சில மாதங்களின் பின்பு, அவருடைய அரசியல் வாழ்க்கை குறித்து ஒரு நூல் வெளி வந்தது. அதனை எழுதியவர் இந்திரா காந்தியின் பிரத்தியோகச் செயலாளர் ஆவார். அவர் சிறிலங்கா அரசையும், தமிழர் பிரச்சனைளையும், தமிழப் போராளிகள் இயக்கங்களைப் பற்றியும் இந்திரா காந்தி கொண்டிருந்த சிந்தனைகளை விவரித்து எழுதியிருந்தார். நாம் மேற்கூறியிருந்த விசயங்களை, அவர் தனது நூலில் உறுதி செய்து எழுதியுள்ளார்.
இங்கே இன்னுமொரு மிக முக்கியமான விசயம் ஒன்றை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து, இந்திரா காந்தி அவர்கள் கொண்டிருந்த கணிப்பையும் இவரது பிரத்தியோகச் செயலாளர் தன்னுடைய நூலில் அன்றே குறிப்பிட்டுள்ளார். "ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட, தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும், கொள்கைப் பிடிப்பு உடையவர்களாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளார்கள். எதிர்காலத்தில், இந்தியாவின் அழுத்தத்திற்கு, விடுதலைப் புலிகள் பணிய மாட்டார்கள். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம், தன்னுடைய இலட்சியத்தில் உறுதி கொண்ட ஓர் இயக்கமாக வளர்ந்து வருகின்றது. அவர்களின் வளர்ச்சியை நாம் தடுக்க வேண்டும் (We will have to cut them to size)" - என்று மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றிக் கொண்டிருந்த எண்ணங்களை அவரது பிரத்தியோகச் செயலாளர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.
இங்கே இன்னுமொரு விசயத்தையும் நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளை - குறிப்பாக இலங்கைத்தீவு சம்பந்தப்பட்ட கொள்கைகளை - ஒரு குறிப்பிட்ட அதிகாரக் குழுவினர்தான் தொடர்ந்தும் நிர்ணயித்து வருகின்றார்கள். இந்திய உளவுப் பிரிவான RAWவின், SOUTH BLOCK என்று அறியப்படும் பகுதியினர், இலங்கைக்கான வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பவர்களில் தொடர்ந்தும் செல்வாக்காக இயங்கி வருகின்றார்கள். இவர்களுடைய முழுமையான செயற்பாடுகளை விவரிப்பதற்கு இது தளம் இல்லையென்றாலும், தம்முடைய வர்க்க நலன் கருதி, தமிழீழ மக்களின் நலனுக்கு எதிரான செயற்பாடுகளைத்தான் இவர்கள் தொடர்ந்தும் செய்து வருகின்றார்கள் என்பதனை இங்கு பதிவு செய்து கொள்கின்றோம்.
ஆனால், தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவின் நலனுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளார்கள். இந்தியாவுடனான உளப்பூர்வமான, ஆத்மார்த்தமான நட்புறவை நாடி, தன்னுடைய உள்ளக்கிடக்கையை, விருப்பத்தை, வேண்டுகோளை, தமிழீழத் தேசியத் தலைமை தொடர்ந்தும் தெரிவித்தே வந்துள்ளது.
இயக்கத்தின் மீது இந்தியாவின் அரசியல்- இராணுவ அழுத்தங்கள், செயற்பாடுகள் இருந்தபோதிலும் சரி, இந்த அரசியல் - இராணுவ அழுத்தங்களை எதிர்கொண்டு வெற்றி கொண்ட வேளைகளிலும் சரி, சிங்களப் பேரினவாத அரசுகள் மேற்கொண்ட போர்களில் இயக்கம் வெற்றி கொண்ட வேளைகளிலும் சரி, அரசியல் வெற்றிகளை அடைந்திட்ட வேளைகளிலும் சரி, தமிழீழத் தேசியத் தலைமை, தன்னுடைய உள்ளக் கிடக்கையை, இந்திய தேசத்தின் மீதான தன்னுடைய நட்புணர்வை வெளிப்படையாகவே காட்டி வந்துள்ளது.
வரலாற்றிலிருந்து சில சம்பவங்களைச் சுட்டிக் காட்டுவது இவ்வேளையில் பொருத்தமானதாகும். தமிழ் மக்களின் ஒப்புதலைப் பெறாது, அவர்கள் மீது இலங்கை - இந்திய ஒப்பந்தம் திணிக்கப்பட்ட காலகட்டத்தில், அதாவது சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு, 1987 ஆம் ஆண்டு, சுதுமலையில் தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்றிய உரையின் போதும், இந்தியாவுடனான நட்புறவை வலியுறுத்திப் பேசியிருந்தார்.
"இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, தமிழ் மக்களுக்கு உரிமை எதையும் பெற்றுத் தாரது" என்பதையும், "இந்த ஒப்பந்தத்தைத் தாம் ஏற்கவில்லை" என்பதையும், "இந்தியாவின் கேந்திரச் செல்வாக்கானது, தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தோடு உரசுகின்றது" என்பதையும் விளக்கிய தேசியத் தலைவர், இன்னுமொரு விசயத்தையும் அன்று வலியுறுத்தியிருந்தார்.
"நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். நாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர்" என்று தமது நிலைப்பாட்டைத் தேசியத் தலைவர் அன்றே தெளிவாகக் கூறியிருந்தார். தமிழீழத் தேசியத் தலைவரின் அந்தக் கூற்று, நேர்மையானதாகவும், தெளிவாகவும் இருந்தது. அப்போதைய இந்திய அரசின் தெளிவற்ற சிந்தனையில் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விமர்சித்த தலைவர், அதே வேளையில், இந்திய தேசத்தின் மீதான தம்முடைய நட்புறவையும் தெளிவுபடுத்தியிருந்தார்.
"இந்தியாவின் இறை€யாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், அதன் மக்களுக்கும், விடுதலைப் புலிகள் அடிப்படையில் எதிரானவர்கள் அல்லர்!"- என்ற திடமான, தெளிவான சிந்தனையை அன்றே தலைவர் வெளிப்படுத்தியிருந்தார். அன்றைய இராஜதந்திரிகளினதும், இந்திய உளவுப் பிரிவினரதும், அன்றைய அரசியல்வாதிகளினதும், தவறான கணிப்புக்களாலும், செயல்களாலும், பின்னாளில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே போர் மூண்டு கசப்புணர்வுகள் தோன்றினாலும், இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டுக்கும், இந்திய மக்களுக்கும், அடிப்படையில் விடுதலைப் புலிகள் எதிரானவர்கள் அல்லர் என்ற எண்ணத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
பின்னர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும், இந்தியவுடனான நட்புறவு குறித்து தேசியத் தலைவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். 1987 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக இருந்தன. ஆனால் 2002 ஆம் ஆண்டு சமாதான சூழ்நிலை ஏற்பட்ட வேளையில், புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக, விசுபரூபம் எடுத்து இருந்தன. ஆனால், அந்த இரண்டு வித்தியாசமான காலப் பகுதிகளிலும், தமிழீழத் தேசியத் தலைவர், இந்தியாவின் நட்புறவு குறித்து ஒரே கருத்தைத்தான் கொண்டிருந்தார். m
பின்னர் சிறிலங்கா அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிய போதும், இந்தியாவின் அனுசரணையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நாடி நின்றதை நாம் அனைவரும் அறிவோம். சமாதானப் பேச்சுவார்த்தைகளை, விடுதலைப் புலிகளின் சார்பில் முன்னின்று நடாத்திய, "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள், அவ்வேளையில் இந்தியாவின் அனுசரணையைப் பல வழிகளில் நாடியது நாடறிந்த செய்தியாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்திய அரசு அன்றும் விடுதலைப் புலிகளின் நேசக்கரத்தைப் புறம் தள்ளியது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும், இந்தியா மீதான தமது நட்புறவை வெளிப்படுத்தியே வந்துள்ளார்கள்.
2003 ஆம் ஆண்டும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான திரு வே.பாலகுமாரன் அவர்கள் தேசியத் தலைவரின் இந்தக் கருத்துக்களை அடிக்கோடிடும் வகையில் உரையாற்றியிருந்தார்.
"இந்தியாவின் பிராந்திய அரசியலில், எந்தவிதமான குழப்பத்தையும் கொண்டுவர நாங்கள் தயாராக இல்லை. எனவே இந்தியா, புலிகளை இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டும். நாங்கள் என்றைக்கும் இந்தியாவின் போக்குக்கு எதிராகச் செயல்பட விரும்பியதில்லை. எம்மோடு இந்தியா நேர்மையாக உறவு வைக்க முன்வந்தால், நாங்களும் இணக்கமாகச் செயல்படத் தயாராக இருக்கின்றோம். அவர்களாகவே உருவாக்கிக் கொண்டால் அன்றி, எம்மோடு மோதுவதற்கு இந்தியாவிற்கு எந்தக் காரணமும் கிடையாது..." என்று திரு வே. பாலகுமாரன் அவர்கள் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.
"தேசத்தின் குரல்" திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களும், மீண்டும் பல தடவைகள் இந்தியாவுடனான நட்புறவை வெளிப்படுத்தியிருந்ததோடு, இந்திய வெளியுறவில் மாற்றம் வரவேண்டும் என்றும் தெரிவித்து வந்திருக்கின்றார். அத்தோடு பிரிகேடியர் திரு சு.ப.தமிழ்ச்செல்வன், சமர் நூலாக்கப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஆகியோரும் இத்தகைய நட்புக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் தெரிவித்தே வந்துள்ளார்கள். இந்திய அமைதி காக்கும் படையினருடனான போர் குறித்து, நாம் விருப்பு - வெறுப்பின்றிச் சிந்தித்துப் பார்த்தால், அதில் ஓர் அடிப்படை நியாயம் தமிழர் பக்கம் இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். சுருக்கமாகக் கூறினால், ஈழத் தமிழர்கள் குறித்த ஆனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்க முடியாத ஒப்பந்தம் ஒன்றை, ஈழத் தமிழர்கள் மீது திணிக்க முயன்றபோது, தனது உரிமையையும் சுதந்திரத்தையும் காப்பாற்ற ஈழத் தமிழினம் போராடியது.
இதனையே மறுவளமாகச் சிந்தித்துப் பார்ப்போம். இதே போல், வேறு ஒரு வல்லரசு, இந்தியா குறித்த ஆனால் இந்திய மக்கள் சம்பந்தப்படாத, இந்தியாவின் பிரச்சனையைத் தீர்க்க முடியாத ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மீது திணிக்க முனைந்திருந்தால் இந்தியா என்ன செய்திருக்கும்? இந்தியாவும், ஈழத் தமிழினம் போன்றே தன்னுடைய உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடியிருக்கும்.
இதில் இருக்கின்ற அடிப்படை நியாயம் ஒன்றுதான்! இதனைப் புரிந்து கொள்வதும் கடினமான ஒன்று அல்ல! இந்தியாவிற்கும், இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் ஆதரவாக இருப்பது தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும்தான் என்கின்ற எமது கருத்தை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். இன்று தமிழீழத்திற்கு உரித்தான கடற்பரப்பின் பல பகுதிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால்தான், இன்று இந்தியாவின் கடற் பிராந்திய நலன், உண்மையான பாதுகாப்பு நிலையில் உள்ளது.
மாறாக, இந்தக் கடற்பிராந்தியப் பகுதிகள், சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமேயானால், இந்தப் பகுதிகளுக்குள் இந்திய விரோத சக்திகள் குடிபுகுந்திருக்கும். இந்தப் பகுதிகளையெல்லாம் இந்தியாவிற்கு எதிரான நாடுகளிடம், சிறிலங்கா அரசு குத்தகைக்கும் விட்டிருக்கும். இங்கே சந்தேகத்திற்கு இடமான விசயமொன்றைச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். கடந்த ஆண்டு, காலித் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளானது. அத் தாக்குதல் குறித்த முழுமையான செய்திகள் வெளிவராதவாறு, சிறிலங்கா அரசு மறைத்து விட்டது. ஆனால் எமக்குக் கிடைக்கப்பெற்ற சில தகவல்கள் புதிய சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன.
"காலித்துறைமுகத்தில் இருந்த ஆயுதக் களஞ்சியம், சிறிலங்காவிற்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியம் அல்ல" என்றும், "அது வேறு ஒரு நாட்டிற்குச் சொந்தமானது" என்றும், சில தகவல்கள் கசிந்து வந்திருந்தன. "žனாவின் அமைப்புக்களில் ஒன்றான நொரிங்கோவிற்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியம்தான் தாக்கப்பட்டது" என்றும், "காலியில் žனாவின் ஆயுதக் களஞ்சியம் வைக்கப்படுவதற்காக, சிறிலங்காவோடு ஒப்பந்தம் ஒன்றை žனா முன்னர் கொண்டிருந்ததாகவும்" செய்திகள் உலாவின. இந்தியாவின் பிராந்திய நலனுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக் கூடிய இந்த விசயம் உண்மைதானா? இந்தியா இவ்விசயங்களை உணராதது போல் இருந்தாலும், இந்தியாவிற்கான சார்பு நிலையில்தான் விடுதலைப் புலிகளும் தமிழீழ மக்களும் இருக்கக்கூடிவர்கள் என்ற யதார்த்த நிலையை அமெரிக்கா உணர்ந்து வைத்துள்ளது.
திருகோணமலை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, சிங்களவர்கள் கையில் இருந்தால், அது தனக்குச் சாதகமானது என்றும், தேவைப்பட்டால், திருகோணமலையை, இந்தியாவிற்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என்றும், அமெர்க்கா எண்ணிச் செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில்தான் கிழக்கு மாகாணத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அடித்துத் துரத்தப்படுவதையும், அங்கே சிங்களப் பௌத்தக் கோவில்கள் கட்டப்படுவதையும். அமெரிக்கா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது. இவ்வளவற்றையும் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்ற இந்தியாவோ, பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருண்டு விட்டது என்பது போல், மௌனமாக இருந்து வருகின்றது. இந்தியாவின் பூகோள நலன் ஈழத் தமிழர்களோடு இணைந்த ஒன்றாகும். பண்டைக் காலத்திலிருந்தே, வரலாற்று ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, அரசியல் பொருளாதார ரீதியாக, ஈழத் தமிழினத்திற்கும், இந்தியாவிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளதை வரலாறு கூறும். அடிப்படையில் சிங்கள தேச மக்கள் இந்தியாவின் நலனுக்கு எதிரான எண்ணங்களைக் கொண்டிருக்கையில், தமிழீழ மக்கள் இந்திய தேசத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்து வந்துள்ளார்கள். தவிரவும், சிறிலங்கா அரசுகளின் இந்திய விரோத மனப்பான்மை என்பதானது, ஒரு வெளிப்படையான விசயமுமாகும்.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல விசயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். இந்திய-žன யுத்தத்தின் போதும், இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போதும், சிறிலங்கா அரசுகள் இந்தியாவின் நலனுக்கு எதிரான கோட்பாடையும், செயல்பாடுகளையும் கொண்டிருந்தன. இந்திய - žனா யுத்தத்தின் போது, இலங்கைத் தமிழ் மக்கள், இந்திய அரசுக்கு அனுப்புவதற்காக நிதி சேகரிப்பை நடத்தி, அவ்வாறு சேகரித்த நிதியை, இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் கையளித்தார்கள். ஆனால் அந்த நிதியை, இந்தியாவிற்கு அனுப்ப விடாமல் சிறிலங்கா அரசு தடை செய்து விட்டது. ஒருகால கட்டத்தில் இந்தியத் திரைப்படங்கள், சஞ்சிகைகள், போன்றவற்றின் இறக்குமதியையும் சிறிலங்கா அரசு மட்டுப்படுத்தியிருந்ததையும் நாம் அறிவோம். சிறிலங்காவின் பொருளாதார நலன் குறித்த அக்கறையையும் விட, தமிழ்-இந்திய வெறுப்பு மனப்பான்மைதான் சிங்கள அரசுகளிடம் மேலோங்கி இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த உடனேயே, இந்திய வம்சாவழித் தமிழர்களை, இந்தியாவிற்கு அனுப்பி விடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வரலாற்றின் அவமானகரமான அடையாளங்களாகும்! சிங்கள மக்கள், சிங்கள அரசுகள், சிங்களத் தலைவர்கள் என்று சகல மட்டங்களிலும், இந்த வெறுப்புணர்ச்சி மேலோங்கி நிற்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் (1985) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் சிறிலங்கவின் கிரிக்கெட் குழு, இந்தியாவின் கிரிக்கெட் குழுவினை வென்றதைக் கொண்டாடும் விதமாக, ஒரு நாளை, பொது விடுமுறை தினமாகவே, ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா அறிவித்ததை ஓர் உரிய உதாரணமாக நாம் இங்கே சுட்டிக் காட்டலாம். "ஜே.ஆர் ஜெயவர்த்தனா வெறுப்பது இந்தியாவை மட்டுமல்ல, இந்திராவையும் கூடத்தான்!" - என்று மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் (தனிப்பட்ட உரையாடலின்போது) தெரிவித்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கதாகும். சிறிலங்கா அரசும், இந்திய அரசும் கைச்சாத்திட்ட அந்த ஒன்றுக்கும் உதவாத ஒப்பந்தத்தையே இன்று சிறிலங்கா அரசு தூக்கி எறிந்து விட்டது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள குறைகள் பற்றியும், நிறைவற்ற தன்மை பற்றியும், இவற்றைக் கூட சிறிலங்கா நிறைவேற்ற மாட்டாது என்பதையும், விடுதலைப் புலிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.
ஆனால் இந்தியா, சிறிலங்கா அரசை நம்பியது. நம்பிய இந்திய அரசுக்கு நாமம் போட்டு விட்டது சிறிலங்கா அரசு. தங்களுடைய கடந்த காலச் செயல்பாடுகள் மூலம் சிறிலங்கா இந்தியாவிற்குச் சில செய்திகளைச் சொல்லியுள்ளது. இந்தியா இவை குறித்து இனியாவது தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இந்தியாவிற்கு, சிறிலங்கா சொல்லும் செய்திகள்:- - எமது நடவடிக்கைகள், தமிழர்களுக்கு எதிரானது என்பதற்கு அப்பால், இந்தியாவிற்கு எதிரான, இந்தியாவின் இராஜதந்திரத்திற்கு எதிரான எமது நிலைப்பாட்டின் நடவடிக்கைகளேயாகும். - நீங்கள் (இந்தியா) நல்ல நோக்கம் என்று நினைத்துக் கொண்டு வருகின்றவற்றை, நாங்கள் ஏதாவது ஒரு வகையில் முறியடித்தே தீருவோம். - உங்களுடைய பிராந்திய நலனக்கு எதிராக நாம் செயல்படுவோம். - இந்தியா ஊடாகத் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றால், இந்தியாவிற்கு எதிராகச் சிறிலங்கா இயல்பாகவே திரும்பும் என்பதுதான் அடிப்படையான விசயமாகும்.
இவ்வாறான செய்திகளை சிறிலங்கா அரசு, இந்தியாவிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள், பல்வேறு சமயங்களிலும், தொடர்ந்தும் என்ன விதமான செய்திகளை இந்தியாவிற்குத் தெரிவித்து வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்குச் சொல்லும் செய்திகளும், நிலைப்பாடுகளும்:-
இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்குப் பங்கம் விளைவிக்க, விடுதலைப் புலிகள் விரும்பவில்லை.
இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் விடுதலைப் புலிகள் எதிரானவர்கள் அல்லர்.
இந்தியாவின் தேசிய நலன்களுக்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருக்கப் போவதில்லை.
இந்தியாவின் புவியியல், கேந்திர நலன்களுக்கு எதிராக, விடுதலைப் புலிகள் செயல்படுபவர்கள் அல்லர்.
இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குப் பங்கம் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் விரும்பவில்லை.
மாறாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்புவதும், நாடி நிற்பதுவும்தான் என்ன?
விடுதலைப் புலிகள் இந்தியாவை நேசிக்கின்றார்கள். இந்திய மக்களை நேசிக்கின்றார்கள்.
இந்தியாவுடன் உண்மையான நல்லுறவைப் பேணவே, விடுதலைப் புலிகள் விரும்புகின்றார்கள்.
இந்தியாவை ஒரு நட்புச் சக்தியாகவே, ஒரு நேச சக்தியாகவே விடுதலைப் புலிகள் கருதுகின்றார்கள்.
இந்தியாவுடன் நட்புறவுடன் இணங்கிச் செயற்பட விடுதலைப் புலிகள் மனப்பூர்வமாக விரும்புகின்றார்கள்.
தமிழ் மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும், வேட்கைகளையும் இந்தியா புரிந்து கொண்டு எமக்கு நீதியான ஆதரவைத் தர வேண்டும்.
இப்போதைய வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒரு செய்தியை இந்தியாவிற்கு சொல்லியிருக்கின்றார்கள்.
"ஈழத் தமிழர்களுக்கு எதிரான, இந்திய நலன்களுக்கு எதிரான, சிங்களச் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகின்ற வரலாற்றுத் தவறை இந்தியா செய்யக் கூடாது" என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது தெரிவித்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளினதும், தமிழீழ மக்களினதும், இந்த நேர்மையான உணர்வுகளை அறிந்து கொண்டு அவர்களது நியாயமான வேண்டுகோள்களை இந்தியா ஏற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. அதற்குரிய செயல்பாடுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இன்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் யாவும் (சிறிலங்கா உட்பட) இந்தியாவிற்கு எதிராகவே, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதை இந்தியா அறியும்! எதிர்காலத் தமிழீழத் தனியரசு ஒன்றுதான் இந்தியாவின் மிக நெருங்கிய நேசநாடாக விளங்க முடியும் என்பதுவும் இந்தியா அறியாதது அல்ல! சிந்திக்க வேண்டும் இந்தியா! நீதியின்பால், நியாயத்தின்பால் செயல்படவும் வேண்டும்! இந்த ஆய்வு ஆஸ்திரேலியா மெல்பேர்ன் "தமிழ்க்குரல்" வானொலியில் (17.03.08) ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும். நன்றி: . தமிழ்நாதம்

No comments: