February 14, 2009

இலங்கை பிரச்னையும், இந்திய அரசியலும்

‘ஓநாயிடம் அன்பு செலுத்தாதே; அது ஆட்டிற்கு செய்யும் கேடு’ என பழமொழி உண்டு. இலங்கை தமிழர் பிரச்னையில் இதனை அப்பட்டமாக செய்து வருகிறது இந்திய அரசு. லட்சக்கணக்கான தமிழர்கள் ஆடுகளை போல் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில், ஓநாயான இலங்கை அரசுக்கு ஆயுதத்தை வழங்கி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.

‘மேற்கே பார்த்துக்கொண்டிருப்பவர்கள், சூரிய உதயத்தை பார்க்க இயலாது’ என்பது போல, இன்னும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன தமிழக அரசியல் கட்சிகள். தேர்தல், கூட்டணி, வாக்கு என்ற நிலையால் பல பிரிவுகளாக பிரிந்து பயனற்று போராடிக்கொண்டிருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். இலங்கை பிரச்னையில் என்னதான் நினைக்கின்றன இந்த கட்சிகள் இது குறித்த பதிவு தான் இது.

திராவிட முன்னேற்ற கழகம் :

தமிழகத்தில் 1957ம் ஆண்டு தேர்தல் மூலம் அரசியல் களத்தில் அறிமுகமான தி.மு.க. 1967ம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. பல முறை தமிழக அரசை நிர்வகித்து வந்த தி.மு.க. இலங்கை பிரச்னையில் ஒரு காலத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்து வந்தது. தனி ஈழம் தேவை என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கிட்டத்தட்ட விடுதலை புலிகள் நேரடியாக ஆதரித்து வந்தது. இவையெல்லாம், ராஜீவ்காந்தி உயிரிழப்பு வரை. ராஜீவ்காந்தி உயிரிழப்புக்கு பின்னர், தனி ஈழம் கோரிக்கையை கைவிட்டது. கூட்டணி, ஆட்சிப்பொறுப்பு என அதீத ஆசைகளால், கொள்கைகளில் இருந்து புரண்டது. இதன் தொடர்ச்சியாக திராவிட கொள்கைகளையும் தூக்கி எரிந்தது. தற்போது விடுதலை புலிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை என நேரடியாக எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. இருப்பினும் வாக்கு வங்கிக்காக இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்மானங்களாக நிறைவேற்றி தீர்த்துக்கொண்டுள்ளது. இதில் ஒரு தீர்மானமும் நிறைவேறியதாக தெரியவில்லை. அனேகமாக இலங்கையில் தமிழர்கள் முழுவதுமாய் கொன்றழிக்கப்படும் வரை இவர்கள் ஓயாது தீர்மான நிறைவேற்ற போராட்டங்களை நடத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் :

இந்த கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். விடுதலை புலிகளை நேரடியாக ஆதரித்தவர். இலங்கை தமிழர் பிரச்னையில் சுமூக முடிவு ஏற்பட வேண்டியது அவசியம் என எண்ணியவர், அதற்காக போராடியவர். ஆனால், இவரது இந்த கட்சி, தற்போது நேர்எதிர் திசையில் பயணித்து வருகிறது. விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என பகிரங்கமாக குற்றம்சாட்டிய இந்த கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா, போரில் மக்கள் இழப்பு புதிதல்ல, எனக்கூறி தமிழர்களின் இறப்பை நியாயப்படுத்தியவர். தற்போது தேர்தல் எனும் ஞானக்கண் திறக்க, திடீரென ஈழத்தமிழர்கள் மீது பாசமும், பரிவும் தொற்றிக்கொண்டுள்ளது.

காங்கிரஸ் :

‘கடைசி பல் இருக்கும் வரை, நரிக்கு பக்தி வராது’ என்பார்கள். காங்கிரஸ் கட்சிக்கு இது நன்றாக பொருந்தும். காங்கிரஸ் கட்சிக்கு ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை பற்றி கவலையில்லை. அங்கு விடுதலை புலிகள் அழிக்கப்பட வேண்டும். இதற்காக அந்நாட்டு ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்கி, ஒரு இனத்தையே அஅழித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 1967ம் ஆண்டு தி.மு.க.விடம் ஆட்சிப்பொறுப்பை விட்டுக்கொடுத்த காங்கிரஸ், தனது இந்த கேவலமான நிலையின் மூலம் இனி, தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பு ஏற்க முடியவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் :

இலங்கை தமிழர் பிரச்னையில் கடந்த 26 ஆண்டுகளாக ஒரே நிலைப்பாடுடன் உள்ள கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். கடந்த 1983ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்னையை ஒரே சீராக எழுப்பி வருகிறது. விடுதலை புலிகள் பயங்கரவாத இயக்கம், அவர்கள் ஆயுதம் தூக்குவது சரியல்ல என்பது இவர்கள் வாதம். அதேபோல், ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலையும் இக்கட்சி கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் :

இலங்கை பிரச்னையில் திடீரென ஆவேசமாக எதிர்ப்பினை தெரிவித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது, விடுதலை புலிகளை கடுமையாக கண்டித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது கிட்டத்தட்ட ஆதரவு நிலைக்கு சென்றுள்ளது. ஈழத்தமிழர்கள் பாதுகாப்புக்கு தொடர் போராட்டங்களை இக்கட்சி தற்போது நடத்தி வருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியால் ம.தி.மு.க.வின் நிலைப்பாடும், தி.மு.க.வுடனான கூட்டணியால், விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடும், யாருடன் கூட்டணி என தெரியாததால் பா.ம.க.வின் நிலைப்பாடும் இப்பிரச்னையில் எடுபடுமா என்பது தெரியவில்லை.

அங்கு அழிவது நம் இனம் என நினைத்து, இதனை அரசியல் நோக்கமாக கருதாமல், தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தாமல் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்தால், நம் குரலை எதிர்நோக்கி காத்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பது நிச்சயம்.

No comments: