May 11, 2009

வாக்களியுங்கள் காங்கிரசுக்கு!

உங்கள் சகோதரரை கொல்லும்  
மனம் உள்ளதா உங்களுக்கு?  
உங்களின் சகோதரர்களின் குழந்தைகள்  
அனதைகள் ஆக விருப்பமா உங்களுக்கு? 
உங்கள் சகோதரிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை 
எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்வீர்களோ நீங்கள்?  
குண்டு விழுந்தும், உணவு இல்லாமலும் 
உறவினர்கள் சாக விருப்பமா உங்களுக்கு? 
உங்கள் குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்தி சித்ரவதை செய்யும் 
கொடியவனை கண்டு காணாமல் இருப்பீரோ நீங்கள்?  
தாக்குதல் நடத்த ஆயுதம் தருபவனுக்கு 
ஒட்டி உறவாடி ஆதரவு தருவீர்களா?  
இவற்றுக்கெல்லாம் உங்களின் பதில் ஆம் என்றால் 
கிரிக்கெட் பார்த்து சந்தோஷப்படுங்கள்
திரைப்படங்கள் மூலம் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்
இதோ தேர்தல் வந்து விட்டது கவலைப்படாமல் வாக்களியுங்கள்  
காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும்.

April 7, 2009

தமிழினத்துக்கு விழுந்த செருப்படி!

‘‘நான் செய்தது தவறில்லை.எனது செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். இது ஒரு எரியும் பிரச்னை. எங்கள் சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை’’. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது செருப்பை வீசி எரிந்துவிட்டு சென்ற சீக்கிய பத்திரிக்கையாளரின் குரல் இது.
இந்திரா படுகொலையை அடுத்து நடந்த சீக்கியர் படுகொலைக்கு காரணமானவராக குற்றம்சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லரை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து சி.பி.ஐ. நீக்கியது தொடர்பான கேள்விக்கு சரியாக பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த இவர் செய்தியாளர் சந்திப்பில், அவர் மீது செருப்பை வீசி தாக்கியுள்ளார்.
‘‘எனது அணுகுமுறை தவறாக இருந்திருக்கலாம். இதை எந்த பத்திரிக்கையாளரும் செய்யக்கூடாது. ஆனால், நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்’’ என தன் தரப்பு நியாயத்தை சொல்லி இன உணர்வை எடுத்து வைத்துள்ளார் அந்த செய்தியாளர்.
எனவே அவர் செருப்பை வீசியது சரியா? இந்த அணுகுமுறையை வரவேற்பதா என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு இந்த பதிவை படிப்பது நல்லது. அந்த கேள்விகள் பிரதானம் என்பவர்கள் தொடர்ந்து பதிவை படிக்க வேண்டாம்.
சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்பான சி.பி.ஐ. மீதான கோபத்தை அரசின் மீதும், அரசின் சார்பில் செயல்படும் உள்துறை அமைச்சர் மீதும் காட்டியுள்ளார் அந்த செய்தியாளர். சரியா, தவறா என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால், அது ஒரு இன உணர்வு.
ஆனால், இதைப்பற்றி எல்லாம் நாம் படிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. ஏனெனில் நமக்கு ஏது இன உணர்வு. நித்தம் நித்தம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், நமக்கு இன உணர்வு எட்டி கூட பார்க்காது.
தமிழர்களை கொல்ல ஆயுதங்களை வழங்கி விட்டு, அமைதிக்கு தூது போகிறோம் என்றும், ‘போர் நடக்கும் இடங்களில் அப்பாவி தமிழ் மக்கள் இறப்பது சாதாரணம்’ என்றும் நம்மை அடிமையாய் ஆளும் வர்க்கத்தினர் சொல்வதை அமைதியுடன் கேட்டு மீண்டும் அரியாசனையில் அமர வைப்பது தானே நம் பணி.
இப்போதைக்கு எம்.பி. சீட், ஜெயித்தால் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் கேபினட் அமைச்சர் பதவி. தமிழர் செத்தால் எனக்கென்ன என கணக்கு போட்டு வரும் கருணாநிதிக்கும், இலங்கை தமிழர்கள் உயிரை ..யிராக கூட மதிக்காத காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் இன்னும் நம்புகிறோமே நமக்கு ஏது இன உணர்வு.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பிய சிறுத்தை கட்சித் தலைவர் இப்போது ஆயுதம் வழங்கி கொல்லும் ‘கை’யுடன் கைகோர்த்துள்ளார். இலங்கை தமிழர்கள் எங்கள் சொந்தங்கள் என நீட்டி முழக்கி புரட்சி வார்த்தைகளில் புயல் போல் பேசியவர் இலங்கை தமிழர்கள் துச்சமென மதிக்கும் அன்னையுடன் கரம் கோர்த்து, தமிழர் படுகொலையா அப்படியென்றால்? என கேட்கத்துவங்கி விட்டார். இவர்கள் இருவரையும் விட அம்மாவுடன் நேரிடையாகவும், காங்கிரசுடன் மறைமுகமாகவும் கரம்கோர்த்துள்ளார் மருத்துவர். ஆனால் இதையெல்லாம் கண்ட பின்னும், கொலையாளிகளில் குறைந்த கொலை செய்தவர்களை தேடுவதை போல இவர்களில் ஒருவரையே தேடி வருகிறோமே நமக்கு ஏது இன உணர்வு. அங்கு தினமும் செத்து செத்து பிணமாகி வருபவர்கள் நம் இனத்தினர். தமிழர்கள். அதை எப்படி நாம் மறக்கிறோம். கொலை செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு போராடும் நிலையில், கொலையை தடுத்து நிறுத்த போராட தயங்குகிறோமே நமக்கு ஏது இன உணர்வு.
அரசுடன் எவ்வித தொடர்பும் இல்லாத சி.பி.ஐ. மீதான சீக்கியர்களின் கோபம், அரசின் மீதும், அரசு சார்பில் உள்துறை அமைச்சர் மீது செருப்பாய் எரியப்பட்டுள்ளது. இதே தமிழன் இன உணர்வு கொண்டால் . . . ஆனால், இந்த கேள்விகளுக்கு யோசிக்க வேண்டிய அவசியம் கூட நமக்கு ஏற்படாது. இன உணர்வு என ஒன்று நம்மிடம் இருக்கிறதா என்ன?
சீக்கிய பத்திரிக்கையாளரால் உள்துறை அமைச்சருக்கு விழுந்த செருப்படி, உண்மையில் தமிழனுக்கு விழுந்த செருப்படி. நான் ப.சிதம்பரத்தை கூறவில்லை. அவரை அப்படி கூற எனக்கென்ன பைத்தியமா பிடித்துள்ளது.

March 18, 2009

ஒரு எம்.பி. தொகுதிக்கு கொள்கையை அடமானம் வைத்த திருமா

‘‘சிங்கள அரசுக்கு எதிரான அறப்போராட்டத்தை வலுவிழக்க செய்யும் தமிழக அரசின் முயற்சி வேதனையை அளிக்கிறது. ஆதாரிக்காவிட்டாலும் தமிழக அரசு எதிர்த்திருக்க கூடாது’’
இது இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி நடந்த போராட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பகுதி. இது மட்டுமன்றி, இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தொடர்ந்து கண்டன குரல்களை பதிவு செய்து வந்தவர் தொல்.திருமாவளவன். ஆனால், இப்போது நிலை தலைகீழ். இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பான போராட்டங்களில் அண்மைகாலமாக தொல்.திருமாவளவன் பங்கேற்கவில்லை. அது தொடர்பான அறிக்கைகளும், பேச்சுகளும் இல்லை. அதேசூழலில் தான் பகிரங்கமாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
இலங்கை தமிழர், விடுதலை புலிகள் ஆதரவு நிலைக்காக விடுதலை சிறுத்தைகளுடன் காங்கிரஸ் கட்சி, கூட்டு வைக்க கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தலைமைக்கு பகிரங்கமாக வேண்டுகோள்
விடுத்தனர். இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தெரியும்.
‘ஒட்டுமொத்த தமிழர்களை காங்கிரஸ் ஆட்சி இழிவு படுத்துகிறது. தமிழர்கள் ஒரு போதும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை மன்னிக்கமாட்டார்கள்’ என கடுமையாக விமர்சித்தார் தொல்.திருமாவளவன். இது காங்கிரசாருக்கும் தெரியும். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் கூட்டணி கரம் கோர்த்துள்ளது இவ்விரு கட்சிகளும். இப்போது காங்கிரஸ் கட்சி பற்றிய விமர்சனத்தை தொல்.திருமாவளவனும், விடுதலைசிறுத்தைகள் கட்சி குறித்த கண்டனங்களை தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தெரிவிப்பதில்லை.
இன்றும் ஆயிரமாயிரம் தமிழர்கள் இலங்கையில் செத்துக்கொண்டிருக்க கூட்டணி இட ஒதுக்கீட்டை துவங்கியுள்ளது தி.மு.க. கூட்டணி கட்சிகள். அநேகமாக காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தில் போட்டியிடக்கூடும். ஆனால், இந்த ஒரு மக்களவை தொகுதியின் மூலம் கட்சியின் கொள்கைகளை இவர் முன்னிறுத்த முடியாது. ஏனெனில் கட்சியின் கொள்கைகளை அடமானம் வைத்து தான் இந்த மக்களவை தொகுதியே பெறப்பட்டுள்ளது.
அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என நீளும் கட்சியின் முழக்கங்கள். அனேகமாக இனி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பயன்படாது. மக்களவை தேர்தலில் பெறப்பட உள்ள ஒரு சீட்டுக்காக கொள்கைகளுடன் இந்த வாசகங்களையும் அடகு வைத்து விடுங்கள்.
விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம், போராட்டங்களின் போது இளிச்சவாயர்கள் நாங்கள் அல்ல என கோஷம் இடம்பெறும். உண்மை தான் உங்களை நம்பிய தமிழர்களும், இலங்கை தமிழர்களும் தான் இளிச்சவாயர்கள்.

March 16, 2009

என்ன ஆனது இலங்கை பிரச்னை?

ர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம், பந்த், கடையடைப்பு, மனித சங்கிலி என தமிழகத்தில் கடந்த இரு மாதங்கள் போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் எதிரொலித்தது இலங்கை தமிழர் பிரச்னை. முத்துக்குமாரில் துவங்கி நடந்த பல தீக்குளிப்பு சம்பவங்கள், இலங்கை தமிழர் பிரச்னையை விஸ்வரூபமாக்கியது.
இந்த போராட்டங்களெல்லாம் நடந்த போது, இலங்கையில் நாளன்றுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வந்தனர். இன்று தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்கள் பன்மடங்கு குறைந்துள்ளது. ஆனால், இலங்கையில் இன்றும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ம.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், பாரதீய ஜனதா, விடுதலை சிறுத்தைகள், தமிழர் பாதுகாப்பு இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒரு புறம். தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் ஒருபுறம் என திரும்பிய திசையெங்கும் இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தி விதவிதமான போராட்டங்கள் நடந்தன.
ஆனால், இப்போது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருந்த கட்சிகள் திசைமாறி போயுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க போராட்டங்களில் தி.மு.க., காங்கிரசை விமர்சிக்க வேண்டியது தவிர்க்க இயலாத சூழல் உள்ள நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி வகிக்கும் விடுதலை சிறுத்தைகளும், தி.மு.க.கூட்டணியில் இடம்பெறக்கூடும் என்பதால் பா.ம.க.வும் இப்போது போராட்ட நடவடிக்கைகளில் இருந்து வெளியேறியுள்ளன.
இதேபோல், சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் திரைப்படத்துறையினரும், கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் பெரியார் திராவிடர் கழகத்தினரும், நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் ம.தி.மு.க.வினரும் போராட்ட நடவடிக்கைகளில் மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இவர்களின் கோரிக்கை இலங்கை தமிழர் பிரச்னையை கண்டித்து அல்ல. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி.
அதேபோல், இலங்கை தமிழர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், போலீசாரை கண்டித்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டம், கல்லூரி மூடல் சம்பவத்தால் ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில், இப்போது இலங்கை தமிழர் பிரச்னையை கையில் எடுக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இனி இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கான போராட்டங்கள் இருக்காது. ஆனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு குரல்ஙகள் எழும். ஆனால், அவை இலங்கை தமிழர் நலனை காப்பதாக இருக்காது. மாறாக வாக்குகளை கவருவதற்காக இருக்கும்.
தேர்தல் தேதி அறிவிப்பு நம் இன உணர்ச்சியை அகற்றும் என்றால், நம் இன உணர்ச்சியை என்னவென்று சொல்வது?

March 13, 2009

கம்யூனிசம் பேசும் ‘காஞ்சிவரம்’

ம்யூனிசம் என்ன சாதித்தது? பல விவாதங்களின் போது என் நண்பர்கள் என்னிடம் வைத்த கேள்விகளில் ஒன்று. வரலாற்றை சொல்லி புரிய வைக்க முடியாது என்பதால், பெரும்பாலும் இந்த கேள்விக்கு என் பதில் மவுனமாகவே இருந்து வந்தது. இனி இந்த மவுனம் இருக்காது. அதற்கு மாறாக ‘காஞ்சிவரம் படத்தை பாருங்கள்’ என்பதாக இருக்கும்.

கம்யூனிசம் இல்லாவிடில் தொழிலாளர்கள் நிலை என்னவாகி இருக்கும்? எனும் மிகப்பெரிய கேள்விக்கு 1.30 மணி நேரம் நகரும் மன்னிக்கவும் நம்மை நகர்த்தும் இந்த படத்தில் அவ்வளவு அழகாக விளக்கியிருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். தனது தாய்க்கும், மனைவிக்கும் பட்டு சேலை வாங்கித்தர விரும்பி அதில் தோல்வியடைந்து, மகளின் திருமணத்துக்கு எப்படியாவது பட்டு சேலை வாங்கித்தந்தாக வேண்டும் என முடிவு செய்து, அதற்காக நெசவு செய்யும் இடத்தில் இருந்து பட்டு நூலை திருடி வந்து நெசவு செய்கிறார் பிரகாஷ்ராஜ். இதற்கிடையே நோய் பாதிப்புக்குள்ளாகும் பிரகாஷ்ராஜின் மனைவி இறக்கிறார். தொடர்ந்து மகளுக்காக பட்டு சேலை தயாரிப்பு பணியில் அவர் ஈடுபடுகிறார். இதற்கிடையே, ஊருக்கு தொழிலாளர்கள் நிலையை காண வரும் கம்யூனிசவாதி ஒருவரிடம், கம்யூனிச கொள்கைகளை கேட்கும் பிரகாஷ்ராஜ், அதில் ஆர்வமாக ஈடுபட துவங்குகிறார். கம்யூனிசம் தடை செய்யப்பட்டிருந்த அந்த காலத்திலும் மறைமுகமாக இயக்கத்தை நடத்தி, நெசவாளர்களின் கோரிக்கைகளை முன்வைக்கிறார் பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது தோழர்கள். இதற்காக வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்துகிறார்.

இதனிடையே மகளின் திருமண தேதி நெருங்குகிறது. திருமணத்துக்குள் பட்டு சேலை தயார் செய்ய வேண்டும் என்பதால், போராட்டத்தை தன்னிச்சையாக கைவிடுகிறார் பிரகாஷ்ராஜ். தொழிலாளர்கள் பெரும்பகுதியினர் பிரகாஷ்ராஜூடன் பணிக்கு திரும்புகின்றனர். மீண்டும் பணிக்கு சென்று பட்டுநூலை திருடி சேலையை செய்ய துவங்குகிறார். ஆனால், அடுத்த முறை பட்டு நூலை திருடும்போது கையும் களவுமாக சிக்குகிறார் பிரகாஷ்ராஜ். இதன் பின்னர் சிறைக்கு செல்கிறார். இதனிடையே கிணற்றில் விழுந்து கிடை பிணமாகிறார் பிரகாஷ்ராஜின் மகள். அவரை பார்க்க 2 நாட்கள் சிறைக்காவலில் செல்லும் பிரகாஷ்ராஜ், மகளை கவனிக்க யாரும் இல்லாததால் அவருக்கு விஷம் கொடுத்து கொல்கிறார். அதுவரை தான் நெய்த பட்டு சேலையால் மகளின் உடலை மூட, ஏழை நெசவாளியின் நிறைவேறாத விருப்பத்துடன் முடிகிறது திரைப்படம்.

கம்யூனிசம் நம் நாட்டில் ஏற்படுவதற்கு முன்னர் தொழிலாளர்கள் பட்ட வேதனையை தத்ரூபமாக விளக்குகிறது படத்தின் முதல் பாதி காட்சிகள். அதற்கு மிக அழகாக பொருந்தியுள்ளது கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை சூழல். தனது முதலாளியின் மகளுக்கு பட்டு சேலையை நெயவு செய்து தந்து விட்டு, அதனை பார்க்க தனது மனைவியுடன் ஓடிச்சென்று மறைந்திருந்து பார்ப்பது; பட்டு குறைந்ததால் காட்டு மிராண்டித்தனமாக நெசவாளி ஒருவர் தாக்கப்படுவது; வீட்டில் தொழில் செய்ய அனுமதி மறுத்து அனைவரையும் ஒரே இடத்தில் தொழில் செய்ய கட்டாயப்படுத்துவது என கம்யூனிசம் தோன்றுவதற்கு முன்னர் இருந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை விவரித்து விரிகிறது முதல்பாதி காட்சிகள். கம்யூனிசவாதி நாடகம் மூலம் தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்க்க தூண்டும் காட்சிகள் அழகு.

பட்டு சேலை நெசவு செய்வதில் மிகச்சிறந்த கைத்தறி நெசவாளியாக பிரகாஷ்ராஜ். தாய், மனைவி, மகள் என மூவருக்கும் பட்டுசேலை வாங்கித்தர விரும்பி தோற்கும் நெசவாளியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். பிரகாஷ்ராஜின் மனைவியாக ஷ்ரேயா. மிக அழகான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். பிரகாஷ்ராஜின் மகள், நண்பர் என அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். தனது மனைவி இறப்பதற்கு முன்னால், தனது மகளுக்காக தயார் செய்யப்பட்டு வரும் பட்டு சேலையை மனைவிக்கு பிரகாஷ்ராஜ் காட்டுவதும், அதனை கண்டு புன்னகைத்தவாறு இறப்பதும் மனதை தைக்கிறது. அதேபோன்று இறுதி காட்சியில் மகளை தூக்கி கொண்டு தயார் செய்து முடிக்கப்படாத பட்டுசேலையை காட்டும் போது மனது மேலும் இறுகுகிறது.

இறுதி காட்சியில நெயவு செய்த வரை சேலையை கிழித்துக்கொண்டு வந்து மகளின் சடலத்துக்கு பிரகாஷ்ராஜ் போர்த்துவதும், அது போதாமல் இருப்பதும்; நெசவாளர்கள் தற்கொலை காட்சிகள் உள்ளிட்டவை நெசவாளர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள். கம்யூனிச பாதையில் செல்லும் பிரகாஷ்ராஜ், சுயநலத்தால் திடீரென பாதைமாறுவதால் ஏற்படும் பிரச்னைகளும், அதன் மீதான வசனங்களும் நெகிழவைக்கின்றன. வசனங்களில் நெசவாளர்களின் அழகிய வாழ்வியலும், சோகமும் வெளிப்படுகின்றன. மிக குறைந்த நேரமே என்னை பயணிக்க வைத்த போதும், என்னை நீண்ட தூரத்துக்கு அழைத்து சென்றது காஞ்சிவரம். பொறுக்கி, போக்கிரி, திமிரு என தமிழ் பெயர்களில் படம் எடுத்து, தமிழை வாழ வைக்கும் இயக்குனர்களின் கவனத்துக்கு ... காஞ்சிவரத்தை பாருங்க.

March 9, 2009

நாஞ்சில் சம்பத் மீது தே.பா. சட்டம்

நாட்டின் பாதுகாப்புக்கான சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டத்தை, ஆட்சி பாதுகாப்பு சட்டமாக மாற்றியுள்ளது தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும்.
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், யாருடைய பிரசாரம் கட்சிக்கு பாதகமாக அமையும் என நினைக்கிறார்களோ, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்கிறது தி.மு.க. சீமான், கொளத்தூர் மணி என நீளும் இந்த பட்டியலில் அடுத்து இடம்பெறுகிறார் நாஞ்சில் சம்பத்.
பிரசாரத்தில் தி.மு.க. காங்கிரஸ் எதிர்ப்பை அனலாய் கக்குபவர்களில் முக்கிய இடம் பிடிப்பவர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க.வின் பிரசார பீரங்கி இவர் தான். இவரின் பிரசாரம் கண்டிப்பாக தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும். இதனை உளவுத்துறை அரசுக்கு தெரிவிக்க திருப்பூரில் ஒரு வாரத்துக்கு முன்னதாக நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவரை கைது செய்துள்ளது போலீஸ்.
இதன் தொடர்ச்சியாக இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவுகிறது போலீஸ். அதன்படி, தமிழகம் முழுவதும் இதுவரை நாஞ்சில் சம்பத் மீது பதிவாகியுள்ள வழக்குகளை திருப்பூர் போலீசார் சேகரித்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்த முழுவிவரங்களை சேகரித்துள்ள திருப்பூர் போலீசார், நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதி கோரியுள்ளனர். இன்று (மார்ச் 10) அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார் என உறுதியாக கூறுகின்றன போலீஸ் வட்டாரங்கள்.
சீமான், கொளத்தூர் மணி இப்போது நாஞ்சில் சம்பத் என நீளும் இந்த பட்டியலில் அடுத்து யாராக இருக்கும். வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன், இயக்குனர் மணிவண்ணன் . . . ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம். போலீசாருக்கு ஒரே ஒரு கோரிக்கை, தேசிய பாதுகாப்பு சட்டம் அப்படியே இருந்து விட்டு போகட்டும். தயது செய்து பேரை மட்டும் மாற்றுங்கள், ‘ஆட்சி பாதுகாப்பு சட்டம்’ என்று. . .

February 21, 2009

தேர்தலே ஆயுதமாக . . .

‘என்னை கைது செய்வார்கள், என் எண்ணத்தை என்ன செய்வார்கள். நான் பிரபாகரனின் தம்பி, ஓடி ஒளிய மாட்டேன்’. 3வது முறையாக இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நேற்று கைது செய்யப்பட்ட சீமானின் முழக்கம் இது.
இந்தியா இறையாண்மைக்கு பேசியதாக மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளார் இயக்குனர் சீமான். இந்திய இறையாண்மைக்கு எதிராக என அரசால் கூறப்படுவது, தமிழ் ஈழத்தை ஆதரிப்பது. தற்போது தனி ஈழ கோஷத்தை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்திராகாந்தி, அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் கனவு தனி ஈழம். கட்சியின் பிரதான தலைவர்களின் கனவை முழங்கும் ஒருவரை, கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வும், காங்கிரசும் துடிப்பதும், அதனை அவசர அவசரமாக தி.மு.க. அரசு செய்து முடிப்பதும் எப்படி விமர்சிப்பது என கூற முடியவில்லை.
இலங்கையில் ஆயிரமாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை தமிழர் பிரச்னையில் நாங்கள் தலையிட முடியாது என கூறிய பிரணாப் முகர்ஜியை கண்டிக்காத காங்கிரசும், அ.தி.மு.க.வும், தனி ஈழம் கோரிய ஒருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துவதும், அதற்கு கெடு கொடுத்து நாங்கள் கைது செய்வோம் என கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. சீமான் கைது என்பது வெறும் சம்பவமாக இருக்க கூடாது. முத்துக்குமாரின் வீர மரணம் முதல் சீமான் உள்ளிட்டோர் கைது சம்பவம் வரை இன்னும் ஓரிரு மாதங்களில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். எங்கள் தமிழினத்தை காக்க வராத யாருக்கும் நாங்கள் வாக்கிடமாட்டோம் என புறக்கணிக்க வேண்டும். எங்கள் இனத்தினரின் உயிரை விட எங்களுக்கு வேறேதும் பெரிதல்ல என்பதை நாம் உணர்த்த வேண்டும்.
ஓரினம் அங்கு முழுமையாக கொல்லப்பட்டு வருவதை கண்டு இனியும் நாம் பொறுத்திருக்க முடியாது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என போராட்டங்களை தொடர்வோம். இந்த போராட்டத்துக்கெல்லாம் இறுதி வடிவமாக நாம் தேர்தலை பயன்படுத்துவோம். நம் தமிழின விடிவுக்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தேர்தல் தான் என்பதை மறந்து விடாதீர்கள். பாடம் கற்பிக்கும் நேரம் நெருங்குகிறது.